Header Ads



ஈஸ்டர் தாக்குதல்: பள்ளிவாசல் தலைவரும், பொருளாளரும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை


( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின்  பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக  சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த காலி அத்-தக்வா பள்ளிவாசல்  நிர்வாக சபை தலைவர் மௌலவி எம்.ஜே.எம்.அதாவுல்லா மற்றும்  பொருளாளர்  எம்.எஸ்.எம்.ரிசாத்  ஆகியோர் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை  காலி நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது சட்டமா அதிபரின் நிலைப்பாடு மற்றும் அது தொடர்பிலான ஆலோசனை அடங்கிய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த காலி  நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல்ல  சந்தேக நபர்களை, அவர்களுக்கு எதிராக சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பள்ளிவாசல் தலைவரும் பொருளாரும் 2019 ஏப்ரல் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்கள். சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பள்ளிவாசலை நிர்மாணிக்க சஹ்ரானுடன் தொடர்பினூடாக பணம் கிடைத்ததாகவும் இனவாதத்தை தூண்டும் விரிவுரைகள் நடத்தப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் பள்ளிவாசலில் இருந்த 800 கும் அதிகமாக இருவெட்டுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து தடுத்து  வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள்  ஆறுமாதங்களின் பின்னர் கடந்த 2019 ஒக்டோபரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தொடர்ந்து வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு இருவெட்டுகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் இறுதியாக கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 2021 மார்ச் 15 க்கு வழக்கு பிற்போடப்பட்டது. இந்த நிலையிலே சட்டமா அதிபர் திணைக்கள அறிக்கை காலி பொலிஸிற்கும் நீதிமன்ற பதிவாளருக்கும் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் வழக்கு கடந்த வௌ்ளியன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது எனவும் இருவெட்டுகளில் சந்தேகத்திற்கு இடமான விரிவுரைகள் கிடையாது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இருவரும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டதோடு வழக்கும் நிறைவுக்கு வந்தது. சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி கே.ஆர்.எம். முபீன் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.