Header Ads



மினுவாங்கொடைக்கும், திவுலபிட்டிக்கும் பொலிஸ் ஊரடங்கு - கொரோனாவால் நிலைமை பாரதூரமானது


திவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 50 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதனால் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 


இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 


இந்நிலையில், கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார். 


இதன்படி கம்பஹா, திவுலபிடிய, மினுவங்கொட, வெம்முல்ல, மொரகஸ்முல்ல, வெவகெதர, ஹப்புவலான, ஹேன்பிடிகெதர மற்றும் கன்ஹின்முல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டது. 


இதன் பின்னர் திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போதி அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.