Header Ads



மேற்கு நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள், நபிகளார் பற்றி புரிதல் இல்லை - இம்ரான் கான்


"மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.

இதில் பங்கேற்றவர்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியதுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்குக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியுள்ள அவர், அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

"இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் முகமது நபிகள் மீது கொண்டுள்ள உணர்வு குறித்து மேற்குலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை" என்று மீலாதுன் நபியை ஒட்டி பாகிஸ்தானில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், உலகம் முழுவதும் நிலவி வரும் இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலை குறித்து பேசுவது அவர்களது கடமை என்று கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் இந்த பிரச்சனையை தானே சர்வதேச அளவில் எழுப்பப்போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனை குறித்து பேசியபோது, "மேற்குலக நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து அனைத்து முஸ்லிம் நாடுகளும் கலந்து பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று நான் கோரியுள்ளேன்" என்றும் இம்ரான் கான் கூறினார்.

"இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலையானது, இஸ்லாத்தை பின்பற்றும் சிறுபான்மை மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்களை பாதிக்கிறது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.