நீல மாணிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவுக்கு விற்க முயன்றவர்கள் கைது
நீல மாணிக்கத்தினாலான பாரம்பரிய தொல்பொருள் சிறப்பு மிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்க கொண்டு சென்ற சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொனராகலை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மொனராகலை - கும்புக்கனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் குறித்த புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 அங்குலம் நீளமுடைய நீல மாணிக்க கற்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாரம்பரிய தொல்பொருள் சிறப்புமிக்க புத்தர் சிலையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
றம்பேவ, அநுராதபுரம் மற்றும் பேராதெனிய பகுதிகளைச் சேர்ந்த 20, 26, 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மொனராகலை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment