400 பேர் சிக்கினர், மறைந்திருப்பவர்களை தேடி தொடர் வேட்டை
(எம்.எப்.எம்.பஸீர்)
மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தணியின் வலையமைப்புக்கு உட்பட்ட, தகவலின்றி இருந்த 400 பேர் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சுகாதார தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்லது அங்கு தங்கியிருந்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில், எந்த தகவல்களும் இன்றி இருந்த 275 பேர் நேற்று பொலிஸாரின் விஷேட அறிவிப்பின் பிரகாரம் உரிய இடங்களுக்கு வருகை தந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று அவ்வாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட 14 விஷேட இடங்களுக்கு வருகை தந்து, தம்மை பதிவு செய்து தனிமைப்படுத்தலில் ஈடுபட மறைந்திருந்த பிராண்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு இறுதி அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இதன்போது 125 பேர் தமது தகவல்களை வெளிப்படுத்தி சுகாதார, தனிமைபப்டுத்தல் நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தணி வலயத்துடன் நேர்டை தொடர்புபட்ட மேலும் பலர் தலைமறைவாகியுள்ளமை, பொலிஸ், சுகாதாரத் துறை சேகரித்துள்ள தகவல்கள் பிரகாரம் வெளிப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விஷேட புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.
Post a Comment