Header Ads



பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகொலை - 5 பேர் படுகாயம்

பிரான்ஸின் தலைநகரான பாரிசிற்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வன்முறை காரணமாக இலங்கைத் தமிழர்கள் ஐவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருவதாக பாரிஸிலுள்ள பத்திரிகையாளர் ஒருவர் சற்று முன்னர் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்கலில் கைக்குழந்தை ஒன்று, நான்கு வயதுக் குழந்தை ஒன்று, 14 வயதுடைய இருவர், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் எனவும் அவர் தகவல் தந்துள்ளார்.

Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள இரு குடும்பங்களுக்கு இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு குடும்பங்கள் இங்கு ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் என்றும் தகவல் கிடைக்கிறது.

உடல்கள் இப்பொழுது வரை அந்த வீட்டிலேயே உள்ளன. சடலங்களை எடுத்துச்செல்லும் வாகனம் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறது. பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவம் நடைபெற்றவுடன், இந்த வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த இளைஞன் ஒருவர் உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான்.

“எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்” என குறித்த இளைஞன் மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினார்கள். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தந்த மற்றொரு பத்திரிகையாளர் பின்வரும் தகவலைத் தெரிவித்தார்.

“குடும்பப் பிணக்குகள், வன்முறைகளாக வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் மற்றொரு படுகொலை இன்று பட்டப்பகலில் பாரிஸ் புறநகரான Noisy-le-Sec (Seine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்த அனைவரும் ஈழப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிகிறது.

இன்று பகல் நிகழ்ந்த இக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு:

Rue Emmanuel Arago தெருவில் உள்ள வீடொன்றில் உயிரிழந்தவர்களது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. அவரது பிடியில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஒருவர் அருகே உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து பொலீஸாரும் அவசர சேவையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்த பொலீஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஜவர் இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு அருகே, கத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.

தேசிய மற்றும் நகரப் பொலீஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப் பட்டுள்ளன.


மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

No comments

Powered by Blogger.