Header Ads



பிரெண்டிக்ஸ் கொத்தணிக்கு இன்றுடன் 14 நாட்கள் (முழு விபரம்)


மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையை மையப்படுத்தி கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகியுள்ளன.

நிலவும் சூழ்நிலைகளுக்கு அமைய, அடுத்தவாரம், கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவது சம்மந்தமாக மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்தவாரம் வினைத்திறனாக கொவிட்19 பரவலை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால், அது மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியை கட்டுப்படுத்துவதற்கான பிரதான புள்ளியாக அமையும் என்று, கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு வலையத்தை அண்மித்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளர்களது எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் அங்கு 33 கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்ப சபையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தொடர்ந்தும் அங்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 14 ஆக பதிவாகியுள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரையில் 5 ஆயிரத்து 475 பேருக்கு கொவிட் 19 நோய்த் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 67 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

3 ஆயிரத்து 395 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கம்பஹாவில் கொரோனா பரவல் தீவிரடைந்தநிலையில், கொழும்பு மாவட்டம் குறித்தும் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.

அதிகபடியான பொருளாதார மையங்கள் கொழும்பில் இயங்குவதுடன், சனநெரிசல்மிக்க பகுதியாகவும் இருப்பதால், கொழும்பு மாவட்டத்தில் இந்த நோய்த்தாக்கத்தை தடுப்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், இதுவரையில் கொழும்பில் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதும், அவர்கள் ஊடாக ஏனையோருக்கு அந்த நோய் பரவாதிருப்பதற்கான உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொவிட் 19 காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த மேலும் 26 பேர் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொவிட்19ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 66 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் 53 ஆயிரத்து 937 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 82 தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களில் 9 ஆயிரத்து 386 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்19ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் 19 காவற்துறை அதிகார பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 48 வாகனங்களும் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொவிட்19 நோய்பரவல் தொடர்பாக சமுக ஊடகங்களில் வெளியாக்கப்படும் போலிச் செய்திகள் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.