Header Ads



விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமை பெற்று, பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்


இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று சென்றிருந்த ஞானசார தேரர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


17ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள், 18ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர். 18ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள் 19வது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர்.


தற்போது அவர்களே 20ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரிக்க தயாராகி வருகின்றனர். இதுதான் எமக்குள்ள பிரச்சினை.


தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் எவரும் செயற்பட முயற்சித்தால், அது வரலாற்று ரீதியாக செய்யும் தவறு.குறிப்பாக இரட்டை குடியுரிமையை எடுத்து கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கை பிரஜை எனக் கூறி நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.


எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன். இலங்கை சீனாவின் காலனியாக மாறிதானே வருகிறது.


அத்துடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரும் இதனை செய்ய முடியும். அதேபோல் இந்திய பிரஜையும் நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.


நாட்டின் மீது அளவு கடந்த அன்பு இருந்தால், ஏன் குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு நாட்டில் அரசியலில் ஈடுபட முடியாது?. புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.


பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும்.


கொள்முதல் மற்றும் கணக்காய்வு விடயங்களை எடுத்துக்கொண்டால் மிகவும் பாரதூரமான இடத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காணப்படுகிறது.


ஒரு குடும்பத்திற்கு ஏற்ற வகையில் இதனை செய்ய முடியாது என நாங்கள் நினைக்கின்றோம். அந்த நிலைமையை கடந்து வந்து விட்டோம்.


இதனால் விரிவான கலந்துரையாடல்கள் மூலம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.