Header Ads



எனது அடுத்த இலக்கு கட்சியின் தலைமைத்துவமே என்கிறார் ருவான் - இரகசிய வாக்கெடுப்பில் தோல்வியடைந்த ரவி



(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக என்னை நியமித்தமைக்கான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய ருவான் விஜேவர்தன, தற்போது பிரதித் தலைவராக நான் தெரிவானாலும் எனது அடுத்த இலக்கு கட்சியின் தலைமைத்துவமே ஆகும் என்றும் கூறினார்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களை மீண்டும் எம்முடன் இணைந்து கட்சியை பலப்படுத்த நாம் சகலரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்போம். அனைத்து உறுப்பினர்களும் எனக்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

எனவே  வெகு விரைவில் கட்சியை மறுசீரமைத்து புதிய மாற்றங்களை செய்து மீண்டும் மக்களை சந்திப்போம். சகல தேர்தல்களிலும் நாம் மீண்டும் எமக்கான இடத்தை தக்கவைப்போம்.

கட்சியின் யாப்பிற்கு அமைய எவ்வாறு நகர வேண்டுமோ அதனை நான் செய்வேன். அடுத்ததாக தலைமைத்துவ மாற்றம் நிச்சயமாக இடம்பெறும். அதில் நானும் தலைமைத்துவ போட்டியில் இருப்பேன். ஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று பிற்பகல் கட்சி தலைமையகமான சிரிகொத்தாவில் கூடியது. 

இதன்போது செயற்குழுவில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பு ரவி கருணாநாயக்கவுக்கும் ருவான் விஜேவர்தனவுக்குமிடையில் இடம்பெற்றது. இதில் ருவான் விஜேவர்தன அதிகபடியான வாக்குகளை பெற்று தெரிவானார். 

இந்நிலையில் செயற்குழு தீர்மானம் குறித்தும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.