சில அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்
நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் தலைவர், டொக்டர் எஸ். கமகே தெரிவித்தார்.
காலை 7.30 மணி முதல் மருத்துவ அறிக்கையை விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் நாடு முழுவதும் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குருநாகல், புத்தளம், கண்டி, அநுராதபுரம், நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகளிலும் இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் எஸ். கமகே தெரிவித்தார்.
இதனூடாக மிக விரைவாக மருத்துவ பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் கூறினார்.
இதேவேளை, ஹட்டன் மற்றும் சிலாபம் பகுதிகளிலும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையங்கள் இரண்டை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் எஸ். கமகே குறிப்பிட்டார்.
இதனிடையே கண்டி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள அலுவலகங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அனைத்து வசதிகளுடன்கூடிய இடங்களுக்கு மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் தலைவர் டொக்டர் எஸ்.கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment