Header Ads



பொலிஸ் அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி, தற்போது பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்

(எம்.மனோசித்ரா)

பொலிஸ் சேவையை மறுசீரமைப்பதற்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தியதன் அவற்றை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமது தனிப்பட்ட கருத்துக்களை வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொலிஸ் சேவையை மேலும் வினைத்திறன் கொண்டதாக மாற்றியமைக்க பொலிஸ் அதிகாரிகளுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக அவர்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் சேவையாற்றும் சூழலை உருவாக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. சிறந்த மற்றும் தரமான பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு வழங்க பணியாற்றுவதற்கான சிறந்த சூழல் மற்றும் தொழில் திருப்தி முக்கியமானதாகும்.

பொலிஸ் அதிகாரிகளின் நலன்புரிகளை கருத்திற்கொண்டு அவர்களின் சேவையின் மதிப்பை உயர்த்துவதற்காக நாட்டின் பொலிஸ் நிலையங்களின் வெளிப்புற தோற்றங்களை மேம்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களின் நிலை உள்ளிட்ட உள்ளக  பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளினால் வலுவான கண்காணிப்பு முறைமையை மேற்கொள்வது அவசியமாகும். மக்களின் எதிர்பார்ப்புக்களை அடைய பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் சிறந்த ஒழுக்கத்தினை பராமரிப்பதன் அவசியமாகும் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன,

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்தே மக்கள் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.  அவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளது.

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முறியடிக்க பொலிஸ் அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி தற்போது பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் குறித்த குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருவம் அதேவேளை, ஊழலில் ஈடுபடும் சில பொலிஸ் அதிகாரிகளை திருத்தி அவர்களை சரியான பாதையில் இட்டுச்சென்று பொலிஸ் சேவையினை மக்கள் நட்பு சேவையாக மாற்றுவது சிரேஷ்ட அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளது என்றார். 

No comments

Powered by Blogger.