Header Ads



AAT தேர்வுகளின் அனைத்து மட்டங்களிலும் விருதை வென்று சாதிக் முஜ்தபா சாதனை


வரகாபொல தாருல் ஹஸனாத் அகாடமியில் கல்வி கற்று வரும் சாதிக் முஜ்தபா என்ற கலஹாவை சேர்ந்த மாணவர்,  இவ்வாண்டு நடாத்தப்பட்ட AAT தேர்வுகளின் அனைத்து மட்டங்களிலும் தேசிய ரீதியில் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

தாருல் ஹஸனாத் அகாடமியின் வரலாற்றில் AAT தேர்வுகளின் அனைத்து மட்டங்களிலும் விருதை வென்ற ஒரே மாணவர் இவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

இவரின் சாதனையை பாராட்டியுள்ள அகடமி நிர்வாகம் அவரின் கடின உழைப்பே இத்தகைய சாதனைக்கு காரணம் என சுட்டிக் காட்டியுள்ளதோடு, முதலில் அல்லாஹ்விற்கும் பிறகு அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள், அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இவரின் இத்தகைய சாதனை ஏனைய மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என தாம்  நம்புவதாக அதன் உத்தியோகப் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

2000ம் ஆண்டு சமூக சேவகர் அல் ஹாஜ் அபுல் ஹசன் ஹாஜியாரால் முஸ்லிம் சமூக மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது இலாப நோக்கமற்றது. இங்கு இஸ்லாமிய ஒழுக்க நெறியுடன் கூடிய கணக்கியல் துறைசார் கற்கை நெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 1000 ற்கும் அதிகமான கணக்காளர்களை இந் நிறுவனம் உருவாக்கம் செய்து இந்நாட்டிற்கும், சமூகத்திற்கும் வலுவூட்டியுள்ளது.

தொழில் சார் கணக்கியல் பரீட்சையான AAT ல், இக் கலாசாலை மாணவர்கள் பல தடவைகள் அகில இலங்கை மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளமை அதன் சேவைக்கு இறைவனின் அருளால் கிடைத்த அங்கீகாரமாகும்.

தாருல்ஹஸனாத்தின் இரு பிரதான சிறப்பம்சத்தின் முதலாவது ஏதுவெனில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் G.C.E. (O/L) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஆங்கில மொழியை கற்றுக் கொடுப்பதுடன் AAT மற்றும் G.C.E. (A/L) பரீட்சையையும் ஆங்கில மொழி மூலம் தோற்றி சாதனை படைப்பதற்கு வழிகாட்டப்படுகின்றமையாகும்.

மற்றுமோர் சிறப்பம்சம் என்னவெனில் புனித திருக்குர்ஆனின் இறுதி 3 ஜூஸ்களையும் மனனம் செய்வதற்கு வழிகாட்டப்படுகின்றது. மேலும் இஸ்லாமிய வாழ்வியல் சிந்தனைகளையும், ஒழுக்க விழுமியங்களையும் அறிந்து கொள்வதற்கான ஓர் சூழலை இந்நிறுவனம் அமைத்துக் கொடுக்கின்றது.

19 வருடம் பழமை வாய்ந்த இந் நிறுவனமானது இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் வரகாப்பொல நகரில் 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இயற்கை அழகுமிகு ஓர் ரம்யமான சூழலில் சகல வசதிகளையும் (மாணவர் விடுதி, IT கூடம், விளையாட்டு மைதானம் பள்ளிவாசல், வகுப்பறை) யைக் கொண்டு அமையப் பெற்றுள்ளது. இங்கு இலங்கையின் தலைசிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு பாடபோதனைகள் நடாத்தப்படுவதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஆளுமையுள்ள மாணவர்களை உருவாக்க முடிகின்றது.

இக் கலாசாலையில் வருடந்தோரும் இரு முறை (ஜனவரி மற்றும் ஏப்ரல்) மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றர்.

அம்மாணவர்கள் 2 ½ வருடத்திற்குள் AAT யின் 3 படித்தரங்களையும் ஆங்கில மொழி மூலம் சித்தி பெறுவதுடன் G.C.E. (A/L) பரீட்சையிலும் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிறுவனத்தின் பழைய மாணவர்கள் கணக்கியல் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.