Header Ads



கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரித்தல் - 12 அடிப்படை அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்


(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. இது குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று சிசிர டி ஆப்றூ, எஸ்.துரைராஜா மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர்  அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போதே 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும்  நவம்பர் 26 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. 

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம், முன்னாள் அமைச்சர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது கட்சியின் 4 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் சார்பில்  ஹில்மி அஹமட்,  பாத்திமா சில்மா மொஹிதீன் மற்றும் மொஹம்மட் பிஸ்ரி கஸ்ஸாலி, ஓசல லக்மால் அனில் ஹேரத் மற்றும் ரன்மல் என்டனி அமரசிங்க ஆகிய இரு கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட  2170/8 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரியே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி,  சுகாதார அமைச்சின் செயலர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சட்ட மா அதிபர் உள்ளிட்டோரை  பிரதிவாதிகளாக பெயரிட்டே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இம்மனுக்கள் ஆராயப்பட்ட போது, பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிகளில் புதியவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதால், மனுக்களை திருத்தி அவர்களது பெயர்களை உள்ளீர்க மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

முன்னதாக காலத்துக்கு காலம் திருத்தப்பட்டமைக்கு அமைவாக 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 7481 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள  தானியங்களை களஞ்சியம் செய்தல் மற்றும் அங்கிலொஸ்டோமியாசிஸ்  ஒழுங்கு விதிகளை மேலும் திருத்துவதாக  சுட்டிக்காட்டி  2170/8  வர்த்தமானி 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டம் எனும் தலைப்பின் கீழ் இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 அதில்  முதல் மூன்று திருத்தங்களாக 46,47 மற்றும் 48 ஆம் ஒழுங்கு விதிகளில் உள்ள சில சொற்பதங்கள் திருத்தப்பட்டிந்த நிலையில்,  பிரதானமாக  நான்காவது அம்சமாக 61 ஆவது ஒழுங்கு விதியுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. 61 எனும் புதிய பிரிவூடாக கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறக்கும் ஒருவரின்  சடலத்தை  தகனம் செய்தல் எனும் விடயம் பேசப்பட்டுள்ளது.

 அதன்படி 61 ,62 ஆம் ஒழுங்கு விதிகளில் எது எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், கொவிட் 19 தொற்றினால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் உத்தரவுகளுக்கு அமைய, உயிரியல் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கில் 800 முதல் 1,200  பாகை செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை எரித்தல் வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்துடன் அவ்வாறு எரித்தல் அல்லது தகனம் செய்யும் செயற்பாடானது, உரிய அதிகாரியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுடலை அல்லது இடத்திலேயே இடம்பெற வேண்டும் என அந்த வர்த்தமானியின் 4 ஆவது பிரிவின் 1. அ, ஆ பகுதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2170/8 ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (2) ஆம் பிரிவின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த அல்லது  அந்த தொற்று காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலத்தை, தகனம் செய்தல் தொடர்பில் உரிய அதிகாரியினால் நியமிக்கப்படும் அதிகாரி தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 (3) ஆம் பிரிவின் பிரகாரம், சடலத்தை தகனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும்  உடை, மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை  சவப் பெட்டியுடன் சேர்த்து எரித்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

2170/8  ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (4) ஆம் பிரிவில், மீள பயன்படுத்த முடியுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பின் அவற்றை சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள உரிய உத்தரவுகளுக்கு அமைய தொற்று நீக்கல் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் 4 (5) அம் பிரிவில் சடலத்தின் சாம்பலை, உறவினர்கள் கோறுவார்களாயின், அவர்களுக்கு கையளிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


 இந்நிலையிலேயே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இறப்போரின் சடலங்களை தகனம் செய்யவும், புதைக்கவும் உலக அளவில் 182 நாடுகளில் அனுமதியுள்ளதாகவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழி காட்டலிலும் அதற்கான  பரிந்துரைகள் உள்ள போதும் இலங்கையில் மட்டும் தகனம் செய்வதை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில்  அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனூடாக  சுதந்திரமாக தனது மத அனுஷ்டாங்களை செய்வதற்கான உரிமை உள்ளிட்டவை மீறப்படுவதாக சுட்டிக்காட்டி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  12 உம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. நீதியின் தாமதம் அநீதத்தின் அறிகுறி. வினை விதைத்தோர் வினை அறுப்பர்; தினை விதைத்தோர் தினை அறுப்பர். காலம் தீர்ப்பளிக்கும். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

    ReplyDelete
  2. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நினைத்திருந்தால் அவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்போதோ  எங்களுக்கு உதவி இருப்பார்.

    அவர் இலங்கை முஸ்லிம்களுக்காக இதனைச் செய்ய மாட்டார்.

    மாறாக, அரபிகளும் இதர முஸ்லிம்களும் இலங்கைக்கு சுற்றுலா வர இதனை ஓர் நிபந்தனையாக பாவிக்கும்போது தகனத்தை விட்டுவிட்டு தானத்தை எதிர்பார்ப்பார்.

    காலவோட்டத்தில் அவர்களது இதர நிபந்தனைகளே இலங்கை முஸ்லிம்களை களி கொள்ளச் செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.