Header Ads



ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் சமயங்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது..? இம்ரான் Mp


ஒரேநாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் சமயங்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது  என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார் ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த கேள்வியை எழுப்பினார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசாங்கத்துக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.இதேபோன்ற பெரும்பான்மையை மக்கள் ஆம் ஆண்டு S.W.R.D பண்டாரநாயக்கவுக்கும் வழங்கியிருந்தனர். 

அன்று அந்த பெரும்பான்மையை கொண்டு அவர் முன்னெடுத்த இனவாத நடவடிக்கை இந்நாட்டில் இனப்பிரச்சனைக்கு வழிவகுத்தது.அதேபோன்ற நிலைமை ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் காலத்தில் நிகழக்கூடாது.அதனால் நீங்கள் கொண்டுவர எதிர்பார்த்துள்ள அரசியலமைப்பு மாற்றம் மூவின மக்களுக்குமான அதாவது இலங்கையருக்கான அரசியலமைப்பு மாற்றமாக இருக்க வேண்டும்

ஒரேநாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருள் எதைக் குறிக்கின்றது என்ற குழப்பம் பொது மக்களிடையே காணப்படுகின்றது. இந்த நாட்டில் ஒரே சட்டம் மட்டும் அமுல் படுத்தப்படுமானால் தற்போது அமுலில் உள்ள கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம் என்பன இல்லாமல் ஆக்கப்பட வேண்டுமா? என்பது தெளிபடுத்தப்பட வேண்டும்.

கண்டியச் சட்டம் சிங்கள மக்களின் கலாசார பாரம்பரியத்தோடு இணைந்த ஒரு சட்டமாகும். வரலாற்றுக்காலம் முதல் இந்தச் சட்டம் இந்த நாட்டிலே இருந்து வருகின்றது. அதனை விட இந்த நாட்டிலே மட்டும் தான் இந்தச் சட்டம் இருக்கின்றது. உலகில் வேறு எங்கும் இல்லை. ஒரேநாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருள் கண்டியச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கப் போகின்றதா? என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

அதேபோல தேசவழமைச் சட்டமும், முஸ்லிம் சட்டமும் அந்தந்த சமுகத்தைப் பிரதிபலிக்கின்ற சட்டங்களாகும். இவையும் நீக்கப்படப் போகின்றனவா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே நிலவி வருகின்றது 

ஜனாதிபதி தனது கொள்டகைப் பிரகடன உரையில் ஏனைய சமயங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

பௌத்த சமயத்தவரினதும், இந்து சமயத்தவரினதும், கிறிஸ்தவ சமயத்தவரினதும், இஸ்லாம் சமயத்தவரினதும் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் நடைமுறைகள் வேறு பட்டவை. 

இப்படியிருக்கையில் ஒரேநாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் எப்படி இந்த சமயங்களின் வித்தியாசமான நடைமுறைகளை அரசு கையாளப் போகின்றது? அது மட்டுமன்றி சமயங்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப் படுத்தப் போகின்றது என்ற சந்தேகம் தெளிவு படுத்தப்பட வேண்டும்

No comments

Powered by Blogger.