Header Ads



இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இந்த புதிய தளர்வுகளுக்கு அமைவாக நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் வளாகத்தையும் ஏற்கெனவே கொரோனா வைரஸ் பரவல் காலத்திற்கு முன்னர் இருந்தது போலவே முழு நேரமும் திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.


பள்ளிவாசல்களில் அமைந்துள்ள தண்ணீர் குழாய்களையும் கழிப்பறைகளையும் வழிபாட்டாளர்களின் பாவனைக்காக திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, தண்ணீர்த் தொட்டிகளைத் தொடர்ந்தும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் சுகாதார அதிகாரியின் வழிகாட்டுதல்களையும் வழிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றுமாறும் அந்த அறிவுறுத்தலில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மேலும். அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டு நடவடிக்கைகளும் உள்ளுர் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் முழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. சமூக இடைவெளி பள்ளி வாசலில் தளர்த்த பட்டுள்ளதா?

    ReplyDelete

Powered by Blogger.