Header Ads



பௌத்த தேரருடன் வாக்குவாதம் செய்த, பயங்கரவாதி சஹ்ரான்


ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டு மூன்று வாரங்களுக்கு பின்னர் அச்சுறுத்தல் கடிதமொன்று கிடைக்கப்பெற்றதாக நெல்லிகல சர்வதேச பௌத்த மத்தியநிலையத்தின் நிறுவுனர் வதுரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹாசிம் நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு முன்பாக உள்ள நிலமொன்றை கொள்வனவு செய்வதற்கு வருகை தந்ததோடு அங்கு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு தாம் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் வதுரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு அங்கு பௌத்த பீடம் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்றதா? என இதன் போது அரச சட்டத்தரணி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்

இதற்கு பதிலளித்த அவர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய ஜனாதிபதியின் தலைமையில் குறித்த பௌத்த பீடத்தை திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

எனவே, அருகிலுள்ள பாதைகள் மற்றும் வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது முருதலாவ பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலுள்ள அரபி பாடசாலையில் இருந்து தமது வாகனம் மற்றும் தமது நிழற்படம் என்பன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் ஊடாக தாம் தெரியவந்தததாக வதுரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த அரபி பாடசாலையில் உள்ள சகல ஆசியர்களும் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.

அதில் இரண்டு ஆசிரியர்கள் நொச்சியாகம பகுதியில் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டமை தமக்கு பின்னர் அறியக் கிடைத்ததாகவும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அறிவித்துள்ளார்.

இரண்டாவது தடவையாக சஹ்ரான் ஹாசிம் 2017 முதலாம் காலாண்டில் ஒரே மாதிரி உடை அணிந்திருந்த 50 பேர் கொண்ட குழுவுடன் நெல்லிகல பகுதிக்கு வந்திருந்தார்.

இதன்போது சஹ்ரான் ஹாசிம், இலங்கையில் பௌத்த மதம் பரவிய விதம், விசாகப் பண்டிகை தினம், பொசோன் தினம், தானம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் 8 பேர் கொண்ட குழுவுடன் சஹ்ரான் ஹாசிம் அங்கு வந்திருந்ததோடு கடும் மதவாத போக்கில் உரையாடியதாக வதுரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சஹ்ரான் ஹாசிம் இறுதியாக உரையாடிய தினம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு இதன்பாது கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த அவர் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி தம்முடன் தொலைபேசியில் உரையாடியதோடு கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும் வதுரகும்புரே தம்மரதன தேரர் பதிலளித்துள்ளார்.

'நீர் ஞானசார போன்று இல்லை மிகவும் தந்திரம் மிக்கவர்' எனவும் 'மேலும் 5 வருடங்கள் இருந்தால் எமது மக்களுக்கு இடமில்லாம் போகும்' எனவும் சஹ்ரான் ஹாசிம் தம்மை குறிப்பிட்டதாக வதுரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஏப்ரல் 21 தாக்கதல் தொடர்பில் சஹ்ரான் ஹாசிம் பெயரை எவ்வாறு தெரியும் என ஜனாதிபதி ஆணைக்குழு வினவியுள்ளது.

இதற்கு பதிலளித்த அவர், தாக்குதல் இடம்பெற்று மூன்று மணித்தியாலங்களில் சமூக வலைத்தளங்களின் ஊடாக அவரின் பெயரை அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களுக்கு பின்னர் கடிதமொன்று கிடைத்தது.

அதில் தமக்கான இறுதி எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் வதுரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் 2019 மே மாதம் 14 ஆம் திகதி கிடைத்தது.

உடனடியாக அதனை அப்போதைய பாதுகாப்பு செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு வழங்கியதாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அது தொடர்பில் வதுரகும்புரே தம்மரதன தேரரிடம் விசாரணை எழுப்பப்பட்டதா? என ஜனாதிபதி ஆணைக்குழு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த வதுரகும்புரே தம்மரதன தேரர் அது தொடர்பில் தம்மி;டம் விசாரணைகள் மேற்கொள்ளவில்லை எனவும் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியமைக்கு இணங்க காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தம்மிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. பூதம் போல கிளம்புறாய்ங்க எங்கடா இருந்தங்க இவளோ நாளும்

    ReplyDelete

Powered by Blogger.