Header Ads



பெயரளவிலே உள்ள ஐ.தே.க.யில் சிறந்தவர்களை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அழைப்பு


(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சிறந்த ஒருவர் தெரிவுச் செய்யப்பட்டால் அவருடன் கூட்டணி அமைத்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதேவேளை பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐ.தே.க. பெயரளவிலான கட்சியாக மாத்திரமே இருப்பதாகவும்அதனால் ,  மோசடி குற்றச்சாட்டுகளற்றவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுமாறும் இதன்போது அவர் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பொதுத் தேர்தல் முடிவுகளுக்கமைய மக்கள் எமக்கு ஒரு ஆணையை வழங்கியுள்ளனர். அதன் படி செயற்படுவதற்கே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். அதனையே நாங்களும் விரும்புகின்றோம். எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியினூடாகவே நாங்கள் போட்டியிடுவோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பை யாருக்கு பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இதற்காக கட்சியில் எஞ்சியிருக்கும் பலரது பெயரும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பு யாருக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் அக்கட்சியின் உறுப்பினர்களே முடிவுச் செய்ய வேண்டும். நாங்கள் அந்த விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்த விரும்பவில்லை. ஐ.தே.க.வின் தலைமைத்துவ பொறுப்பு யாருக்கு கிடைத்தாலும். அவர் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு துணைப் போகாத சிறந்த நபராக இருப்பாராயின் அவருடன் கூட்டணி அமைத்து செயற்படுவோம்.

பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே சின்னத்தையும் , பெயரையும் மாத்திரம் ஒரு கொண்ட கட்சியாகவே காணப்படுகின்றது. அதனால் , அந்த கட்சியில் எஞ்சியிருக்கும் சிறந்த நபர்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

No comments

Powered by Blogger.