Header Ads



முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவதற்கு யார் காரணம்..? தவறிய சில ஆசனங்கள்

-நஸ்மின்

 கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடந்த முடிந்து பொதுத்தேர்தலில்  பொதுவாக நாட்டு மக்களும் விசேடமாக இலங்கை வாழ்  முஸ்லிம்களும் வாக்குகளையளித்த  போக்கினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

 கொரோனா தொற்றுப்பரவலுக்கு மத்தியில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் 70 சதவீதமானோர் வாக்களித்தனர். எட்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் 83 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர். 

 இம்முறை தேர்தலில் முழு இலங்கையிலும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 68 இலட்த்து 53696 வாக்குகளைப்பெற்று 128 ஆசனங்களை வென்றெடுத்தது. அக்கட்சிக்கு தேசிய பட்டியல் மூலம் 17 ஆசனங்கள் கிடைத்தன. ஐக்கிய மக்கள் சக்தி 27 இலட்சத்து 71984 வாக்குகளைப் பெற்று 47 ஆசனங்களை வென்றெடுத்தது. இக்கட்சிக்கு தேசிய பட்டியல் மூலம் 7 ஆசனங்கள் கிடைத்துள்ளன. மூன்றாவது சக்தியாக தேசிய மக்கள் சக்தி 4 இலட்சத்து 45958 வாக்குகளைப்பெற்று இரு ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலம்  ஓர் ஆசனத்தையும் வென்றெடுத்தது. ஐக்கிய தேசிய கட்சி இரண்டு இலட்சத்து 4943வாக்குகளைப் பெற்று எந்த ஓர் ஆசனத்தையும் வென்றெடுக்காது  தேசிய பட்டியல் மூலம்ஓர் ஆசனத்தை மட்டும் வென்றெடுத்தது. இதற்கு முன்னைய தேர்தல்களில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 66579 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தை மட்டும் வென்றெடுத்தது. 

இலங்கை தமிழ் அரசுக்கட்சி 3 இலட்சத்து 27168 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களையும் தேசிய பட்டியில் மூலம் ஓர் ஆசனத்தையும் வென்றெடுத்தது. ஈ.பி.டி.பி  61464 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வென்றெடுத்தது. அபே ஜனபல கட்சி 67758 வாக்குகளைப் பெற்று தேசியபட்டியல் மூலம் ஓர் ஆசனத்தை வென்றெடுத்தது. தமழ் மக்கள் தேசிய கூட்டணி 51301 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் வென்றெடுத்தது. 6766 வாக்குகளைப்பெற்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் ஒரு தேசிய பட்டியில் ஆசனத்தையும் வென்றெடுத்தது. தேசிய காங்கிரஸ் 39272 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34428 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும்  வென்றெடுத்தது.  இத்தேர்தலில் நாட்டில் 15 அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. நூற்றுக்கு மேற்பட்ட சுயேட்சைக்குழுக்கள் போட்டியிட்ட போதும் ஒன்று கூட வெற்றி பெறாமை இத்தேர்தலில் குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

இத்தேர்தலில் 9.83 சதவீதம்  புதியவர்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களில் மூன்று பேர் முஸ்லிம்களாவார்கள். ஹாபிஸ் நஸீர் அஹமத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் எம்.முஸர்ரப்  அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் சார்பிலும் புத்தளத்தில் அலிசப்ரி றஹிம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும்  பெற்றுள்ளனர். ஜீவன் தொண்டமான் 109155 வாக்குளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தின் முதலாவது உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். 

யாழ்ப்பாண மாவட்டத்தின் மூலம் சி.வி. விக்னேஸ்வரன் முதன் முறையாக பாராளுமன்றத்துக்கு  பிரவேசிக்கின்றார். நுவரெலியா மாவட்டத்தில் எம். ராமேஸ்வரன்  மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் தெரிவாகினர். வன்னி மாவட்டத்தில் எஸ்.நோஹராலிங்கம் புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 

 இத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முஜிபுர் ரஹ்மான் எஸ்.எம். மரிக்கார். மனோகணேசன். ஆகியோர். வெற்றி பெற்றுள்ளனர். மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரான ஏ.எச்.எம். பௌசி கொழும்பு மாவட்டத்தில் 418683 வாக்குகளைப் பெற்று 7ஆவது இடத்தில் உள்ளார். ஜனகன் விநாயகமூர்த்தி 36191 வாக்குகளைப் பெற்று 10 ஆவது இடத்திலும் கிரசாந்த யோகதாஸ் 21354 8ஆம் இடத்திலும் 14ஆம் இடத்திலும் 

மஹேஷ்  ஜொஹான் 21 ஆம் இடத்திலும் இருக்கிறார். 

 இத்தேர்தலில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள களுத்துறை மாவட்டத்தில் 

சிறுபான்மை இனத்தவர் எவரும் தெரிவாகவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் இருவரே தெரிவாகினர். டாக்டர் ராஜித சேனாரத்ன 77476 வாக்குகளையும் 77083 வாக்குகளைப் பெற்று குமார வெல்கமையும் தெரிவாகினார். இப்திகார் ஜமில் 54305 வாக்குகள்  பெற்று மூன்றாம் இடத்திலும் எம்.எஸ்.எம். அஸ்லம் 34152 வாக்குகளைப்பெற்று ஆறாம் இடத்திலும் உள்ளனர்.

சுமார் 93000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள களுத்துறை மாவட்டம் தொடராக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழந்து வரும் ஒரு மாவட்டமாகும். ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை போட்டியிட்ட இரு முஸ்லிம்  அபேட்சகர்களில் இப்திகார் ஜமீல்  54305 வாக்குகளைப் பெற்றுள்ளார். மொட்டுக்  கட்சியில் முஸ்லிம் ஒருவர் போட்டியிடாத நிலையிலே இவருக்கு இந்தளவு வாக்குகளைப் பெறமுடிந்தது. பேருவளைத்தொகுதியில் பொதுஜன பெரமுன இம்முறை கனிசமான முஸ்லிம்களது வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் களுத்துறை மாவட்டத்தில் இம்முறை அரச ஹஜ்குழு அங்கத்தவரான புவாத் ஹாஜியாரின் தலைமையில் போட்டியிட்டசுயேட்சை முஸ்லிம் குழுசுமார் 4000 வாக்குகளைப் பெற்றுள்ளது. மொட்டுவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்துடனே இந்தசுயேட்சைக்குழு போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. களுத்துறை மாவட்டத்தில் இம்தியாஸ் பாகிர் மாகாரிற்கு பிறகு ஒரு முஸ்லிம் இதுவரை தெரிவாகவில்லை. முஸ்லிம் காங்கிரஸினார் எம்.எஸ்.எம். அஸ்லம் 2010 இல் நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார். 

 பேருவளைத் தொகுதியினை பொதுஜன 15000 மேற்பட்ட வாக்குகளால் வெற்றி பெற்றது பாராளுமன்ற உறுப்பினர்  மர்ஜான்  பளிலுக்கு தேசிய பட்டியில் அபேட்சகராகத் தெரிவுசெய்யப்பட்ட போது அவருக்கு பசில் ராஜபக்ஷ விடுத்த நிபந்தனை 15000 இற்கு மேற்பட்ட வாக்குகளால் வெற்றி பெற்றாலே தேசிய பட்டியலில் உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று இதன்படி பேருவளைத்தொகுதி வெற்றி பெற்றதனால்  மர்ஜான் பளில் தேசிய பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டார். 

திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்களே கிடைத்துள்ளன. எச்.எம்.எம். ஹரிஸ் 36850 வாக்குகளையும் பைசல் காசிம் 29423 வாக்குளையும் பெற்று தெரிவாகியுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் 26153 வாக்குகளைப்பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கின்றார். 

திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எல்.அதவுல்லா 35697 வாக்குகளைப்பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். அதேநேரம் சாய்ந்தமருதினைச் சேர்ந்த ஏ.எல்.எம்.சலீம் 24170 வாக்குகளைப்பெற்றார். இவரது வாக்குகள் கிடைக்காவிடின் அதவுல்லா தெரிவாகியிருக்க மாட்டார். தேசிய  காங்கிரஸில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் 5443 வாக்குகளைப் பெற்றார். 

கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 77400 முஸ்லிம் வாக்குகள் உள்ள போதும் இம்முறை இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களும் ஒரு தமிழ் உறுப்பினரும் தெரிவாகியுள்ளார். தெரிவான தமிழ் உறுப்பினர்களுக்கு கணிசமான முஸ்லிம் ஆதரவு கிடைத்ததனாலே அவரால் வெற்றி பெற முடிந்தது. அவருக்கு அக்குறணைப்பிரதேசத்தில் மட்டும்  சுமார் 8000 விருப்பு வாக்குகள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய மக்கள் சக்தியில் கண்டியில் தெரிவான நான்கு பேரும் பெற்ற வாக்குகள் ரவூப் ஹக்கீம் 83398 எம்.எச்.ஏ. ஹலிம் 71063 எம். வேலுகுமார் 57445 லக்ஷ்மன் கிரியல்ல 52311  கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில்  போட்டியிட்ட ஆதம் பாரிஸ் 22653 வாக்குகளைப் பெற்று  தெரிவாகாத ஏழு பேரில் 6 ஆவது இடத்தில் உள்ளார். 

 புத்தளத்தில் முன்மாதிரி விகிதாசாரத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தமது பிரதிநிதித்துவத்தை இழந்து வந்த புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் இம்முறை தமக்கென ஒரு பிரதிநிதியை வென்றெடுத்துள்ளார். அதன்படி அலிசப்ரி ரஹீம் தெரிவாகியுள்ளார். சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டதன் மூலம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுத்துள்ளது. 

இந்த முன்மாதிரியை களுத்துறை கம்பஹா, கேகாலை, போன்ற மாவட்டங்களில் எதிர்வரும் 

தேர்தல்களில் பின்பற்றினால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இதேநேரம் கண்டி மாவட்டத்தில் இம்முறை அக்குறணை பிரதேச சபைதலைவர் இஸ்திகார் தலைமையிலான வைரம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 1400 வாக்குகளைப் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற ஹக்கீம் மற்றும் ஹலீம் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் ஒருகுறிப்பிட்ட தொகையை  இந்தசுயேட்சைக்குழு பெற்றிருந்தால் கண்டியில் மேலும் ஒரு முஸ்லிம் தெரிவாகியிருக்கலாம். 

கண்டி மாவட்டத்தில் 2001 மூன்று முஸ்லிம்கள் தெரிவானார்கள் ஐ.தே.க. சார்பில் எம்.எச்.ஏ. ஹலீமும் மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஏ.காதரும் தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் ரவூப் ஹக்கீமும் தெரிவானார்கள். 2001 இல் ஐ.தே.க. சார்பில் ரவூப் ஹக்கீம் ஹலீம் காதர் ஆகியோர் தெரிவாகினர். 2004 ரவூப் ஹக்கீம்  எம்.எச்.ஏ. ஹலீம் பைசல் முஸ்தபா இ.தொ.க.பிரதிநிதியாக தெரிவானார்கள் 2010 இல் ரவூப் ஹக்கீம் எம்.எச்.எம். ஹலீம் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் ஆகியோருடன் ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி சார்பில் பைசர் முஸ்தபா தெரிவானார்கள் கண்டியின் வரலாற்றில் நான்கு பேர் இத்தேர்தலிலே தெரிவானார்கள். 

 இம்முறை தேர்தலில் பாரிஸ் ஆதம்  22653 வாக்குகளைப் பெற்றுள்ளார். கண்டி மாவட்டத்தில் பாரம்பரியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்குக்கு மேலதிகமாக அவரால் பெறமுடிந்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் ஆசியுடன் சுயேட்சைக்குழுபேட்டியிட்டனர். அந்த வாக்குகளை பாரிஸ் பெற்றிந்தாலும் அவரால் வெற்றி பெற்றிருப்பது கடினமானது மொட்டுக்கட்சியில் கண்டி மாவட்டத்தில் தெரிவான 8 பேரில் 8ஆவது இடத்தைப்பெற்றுத் தெரிவான உதயன் சமிந்த கிரிந்திகொடவுக்கு 39904 வாக்குகள் கிடைத்துள்ளன. 

சுமார் ஒரு இலட்சத்து 8000 முஸ்லிம் வாக்குகள் உள்ள குருநாகல் மாவட்டத்தில் இம்முறை 800 வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி அபேட்சகர் ரிஸ்வி ஜவஹர்ஷா வெற்றி பெறவில்லை. ஐக்கிய மக்கள் சார்பில் நான்கு பேர்  தெரிவாகிறர். 5 ஆம் இடத்தில் ரிஸ்வி ஜவஹர்ஷா இருக்கிறார் இவர் 48413 வாக்குகளை பெற்றுள்ளார். 

 இங்கு மக்கள் காங்கிரஸ் சார்பில் முஹம்மத் நஸீர் போட்டியிட்டார். இவர்களிருவரும் தனித்தனியாகப்பயணிக்காது ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்திருந்தால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றிருக்கலாம் மாவட்டத்தின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார். 

 இம்முறை களுத்துறை மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல் மூலம் அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் கிடைத்தது. மூவர் தெரிவாகியுள்ளனர். நீதி அமைச்சர் அலிசப்ரி களுத்துறையைச் சேர்ந்தவர். இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் மர்ஜான் பளிலும் பேருவளையைச் சேர்ந்தவர்களாவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகாமடுல்ல கண்டி திருமலை மாவட்டங்களில் முஸ்லிம் அபேட்சகர்களை நிறுத்திய போதும் ஒருவரும் வெற்றிபெறவில்லை. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட றிஸ்லி முஸ்தபா 4373 வாக்குகளையும் அஸ்பர் உதுமாலெப்பை 3411 வாக்குகளையும் பெற்றுள்ளார். 

 வன்னி மாவட்டத்தில் மொட்டுக்கட்சியில் போட்டியிட்ட பசீர் அஹமத் ஜஸார் 2009 வாக்குகளை பெற்றுள்ளார். இங்கு காதர் மஸ்தான் 13454 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மொட்டுக்கட்சியில் போட்டியிட்டு நேரடியாகவே தெரிவானது இவர் மட்டுமே. மொட்டுக்கட்சியில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.எம்.சுபியான் 4568 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 

மட்டகளப்பு முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆகியோரை  உள்ளடக்கிய ஐக்கிய சமாதானக்கூட்டணி இங்கு 31054 வாக்குகளைப் பெற்றது. இன்னும் 2400 வாக்குகள் கிடைத்திருந்தால் இக்கட்சிக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஹிஸ்புல்லா பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருப்பார். பொதுஜன பெரமுன அபேட்சகர் வியாழேந்திரன் 33424 வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார். ஹிஸ்புல்லாவுக்கு காத்தான்குடியில் 24000 வாக்குகள் கிடைத்திருந்தது. ஏனைய பகுதிகளிலும் 2400 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் மட்டக்களப்பில்  இரு முஸ்லிம்கள் தெரிவாகியிருப்பார். 

 கண்டி, களுத்துறை, கொழும்பு, குருநாகல் மாவட்டங்களில் முஸ்லிம் வாக்காளர்கள் திட்டமிட்டு வாக்குகளை அளித்திருந்தால் மேலும் ஒரு சில பிரதிநிதிகளை  வென்றெடுத்திருக்கலாம் என அரசியல் அவதானிகள் வாக்களிப்பின் போக்கினைக் கணித்து தெரிவிக்கின்றார்கள்.

 நன்றி -நவமணி


1 comment:

  1. It is very unfortunate in Kalutara and Kurunegala Muslim MPs were not elected due to 800 odd votes short. Muslim parties should contest together in one symbol to safeguard the Muslim representation. In Ampara Muslim community missed the bonus seat due to contest alone so votes were spilt.

    ReplyDelete

Powered by Blogger.