Header Ads



பாடசாலை மாணவியின் வேண்டுகோளை நிறைவேற்றிய ஜனாதிபதி



மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நடமாடும் நூலகம் ஒன்றை வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

நூலகம் இரட்டை தட்டு கொண்ட பழைய பஸ் ஒன்றை நவீனமயப்படுத்தி பொருத்தமான வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலையை ஆரம்பித்து 05 வருடங்கள் ஆகியும் இதுவரை நூலகம் ஒன்று இருக்கவில்லை. மாணவர்கள் 430 பேரளவில் கல்விகற்று வரும் இப்பாடசாலைக்கு நூலகம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல வருடங்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. 

கடந்த ஜூலை மாதம் 05ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், மெதிரிகிரியவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது பாடசாலையில் தரம் 03ல் கல்விகற்கும் வினுரி தஹம்ஷா என்ற மாணவி பாடசாலைக்கு நூலகம் ஒன்றை பெற்றுத் தருமாறு ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க அவர்களின் ஏற்பாட்டின் மூலம் மஹரகம டிப்போவில் இரும்புக்காக ஏல விற்பனைக்காக வைத்திருந்த இரட்டை தட்டு கொண்ட பஸ் ஒன்றை சபையின் ஊழியர்களால் நடமாடும் நூலகம் ஒன்றுக்கு பொருத்தமான வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது. 

நூலகத்திற்கு அவசியமான புத்தகங்களை வழங்குவதற்கு தெரன ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் மஹரகம டிப்போ ஊழியர்கள் அனுசரணை வழங்கினர். 

நூலகத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, அதிபர் சமிந்த பிரியஷாந்த ஆகியோருடன் மாணவி வினுரி தஹம்ஷா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.08.03  




No comments

Powered by Blogger.