Header Ads



கொள்ளையில் ஈடுபட்டவர்களிடமிருந்து 8 கோடி ரூபா நகைகள் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல நகைக் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு நகரில் உள்ள நகைக் கடை ஒன்று கடந்த 2 ஆம் திகதி இரவு கொள்ளையிடப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் முறையிடப்பட்டதை தொடர்ந்து, மட்டக்களப்பு பொலிஸாரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுத் துறையினரும் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து இருந்திருந்தனர். 

கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்த்தனவின் ஆலோசனையின் கீழும், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ். மெண்டீசின் வாழிகாட்டலின் கீழ், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராட்சியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இதன் அடிப்படையில் குறித்த நகை கடையில் கடமையாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் களுதாவளையில் குறித்த நகைக் கடையில் முன்னர் கடமையாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டன. 

அதனைத் தொடந்து இது தொடர்பில் கண்டியை சேர்ந்த ஒருவரும் கண்டியில் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகை தங்கங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கொள்ளை தொடர்பில் இதுவரையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட தங்கங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தக நிலையில் கொள்ளையிடப்பட்ட 5 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த நகைக் கடையில் இருந்து சுமார் 8 கிலோ கிராம் தங்கம் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

No comments

Powered by Blogger.