Header Ads



'வேலைத் தளங்களில் நாம்' அமைப்பினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்


(எம்.எம்.சில்வெஸ்டர்)

அதிக வரிச் சுமை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சம்பளக் குறைப்பு மற்றும் தொழில்களை இழக்கச் செய்தலுக்கு எதிர்ப்பு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு , அரச சேவையை இராணுவ மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெட பிமே அபி ( வேலைத் தளங்களில் நாம்) அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கலந்துகொண்டிருந்தார். அத்தியவசியப் பொருட்களின் மீதான வரியை குறை, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை உடன் வழங்கு, அரச சேவைகளை இராணுவ மயமாக்கலை நிறுத்துக, மேலதிக நேர கொடுப்பனவை வழங்கு, லீசிங் நிவாரணத்தை சட்ட ரீதியாக அமுல்படுத்துக போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

பல்வேறு காரணங்களால் பொது மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக வெட பிமே அபி அமைப்பின் ஏற்பாட்டாளர் சின்த்தக்க பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கொவிட் தொற்று நோய் இதுவரை நம்மை விட்டு அகலவில்லை. ஆயினும் தற்போது நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக மிகவும் துன்பப்படுகிறார்கள். கொவிட் பிரச்சினையினால் ஊரடங்கின்போது வீடுகளில் முடங்கியிருந்த மக்களின் வாழ்வாதாரம் இல்லாமல் போயுள்ளது. அவர்களுக்கு தற்போது பணமின்றி உள்ளனர். தொழில் இல்லை. அரசாங்கில் வேலை செய்தவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. மேலதிக நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியக் கொடுப்பனவு குறைக்கபட்டுள்ளது. எமது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு, ஓய்வூதிய கொடுப்பனவு போறைன ஜனவரி மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் தொழில்புரிந்தவர்கள் எதுவித காரணங்களுமின்றி வெளியேற்றியுள்ளனர்.  சுய தொழில்களை செய்தவர்கள் இன்று வீதியில் உள்ளனர். எந்தப் பக்கத்திலிருந்தாலும் மக்கள் படும் துன்பம், மக்களின் பசி போன்றவையே கேட்கிறது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கொண்டு செல்ல முடியாத நிலை போன்றவை காணப்படுகிறது. மரத்திலிருந்து விழுந்தவனுக்கு மாடு முட்டியது போன்ற செயலையே இந்த அரசாங்கம் செய்கிறது.  எதற்கெடுத்தாலும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கும் விரி விதக்கப்பட்டுள்ளது. மின்சார பாவனைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பாவனைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிரேஷ்ட குடிமக்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டி தற்போது 8 வீதமாக குறைத்துள்ளது.

ஆகவே, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் மீதான வரியை குறைப்போம். ஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தின்போதும், நான்தான் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக இருந்தேன். 12 நாட்களுக்குள் எரிபொருட்களில் விலையை குறைத்தேன். அதுபோன்று ராஜபக்சாக்கள் விதிக்கின்ற எரிபொருட்கள் மீதான அதிக வரியை இல்லாமல் செய்வோம். மேலும், குடிநீர் பாவனை மற்றும் மின்சார பாவனை போன்றவற்றுக்கு நிவாரணங்களை அளிப்போம்.  எந்த வித குறைப்புமின்றி அரச சேவையாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியக்காரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவையும் வழங்குவோம். எந்தவொரு ஊழியர்களையும் தொழிலிருந்து விரட்டியக்கப்பட்ட விடமாட்டோம். கொவிட் பிரச்சினையால், வாழ்வாதாரம் இழந்த அனைவரினதும் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும் வரையில் மாதாந்தம் 20 ஆயிரம் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

No comments

Powered by Blogger.