கொலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தவர் கைது
தனிப்பட்ட குடும்பப்பகை காரணமாக ஒருவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கைக்குண்டுடன் சென்றுகொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் அதிலடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ். ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய அவருக்கு 22 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
சின்னவன் என்று அழைக்கப்படும் இந்தச்சந்தேக நபர் பொலிஸாரால் தேடப்பட்டுவந்துள்ளார். வவுனியாவில் சங்கிலி அறுப்பு குற்றத்துக்காக இவர் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தநிலையில் சந்தேக நபரின் மனைவி தென்மராட்சியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார்.
தனது மனைவியை அழைத்துச் சென்றவரைக் கொலை செய்யும் நோக்குடன் சந்தேக நபர், உரும்பிராய் ஊடாக சாவகச்சேரிக்கு மற்றொருவருடன் பயணித்தபோது, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment