Header Ads



கருணாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா...?

பாறுக் ஷிஹான்

கருணாவிற்கு விடுதலை புலிகளின் தலைவரை தேசிய தலைவர் என கூறுவதற்கு அருகதை இல்லை கருணாவிற்கு தேசிய தலைவர் மகிந்த ராஜபக்ச மாத்திரமே என பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்தார்.

 திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் 

மேலும் குறிப்பிடுகையில்..

எமது பலமான போராட்டத்தை அழித்த கருணா தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க முடியாது வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எம்மை ஏக பிரதிநிதிகளாக ஏற்று இருக்கிறார்கள். எமது கல்வியாளர்களை அழித்து எமது பொருளாதாரத்தை சிதைத்து அரசுக்கு துதிபாடும் கருணாவால் எப்போதும் எமது மக்களுக்கு நன்மை இல்லை.

கருணாவின் ஒவ்வொரு பேச்சுகளையும் பார்த்தால் அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி போய் பைத்தியம் பிடித்தவன் போல் புலம்பி திரிகின்றார். 

தமிழீழ விடுதலை புலிகளை வைத்து அரசியல் செய்ய கருணாவிற்கு உரித்து இல்லை .குறிப்பாக கருணா தமிழர்களுக்கு உரிய பண்புகளை இழந்து நிற்கின்றார்.ஒட்டு மொத்த தமிழர்களையும் தலைகுனிய வைத்து விட்டு தேர்தலில் களமிறங்கி இருக்கின்றார். 

மாற்று சமூகத்திற்கு எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பறித்து தாரை வார்க்கும் செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றார் .இதன்மூலம் அரசியல் ரீதியாக இருக்கின்ற எமது அதிகாரத்தை சிதைக்க முனைகின்றார். 

எமது போராட்டத்தை காட்டி கொடுத்ததற்காக அரசாங்கம் கருணாவிற்கு அரை மந்திரி பதவியை இரண்டு தடவை வழங்கியது . அக்காலத்தில் கருணாவுடன் இணைந்து போராடிய போராளிகளையாவது காப்பாற்றி இருக்கலாமே இவற்றை செய்யாத ஒருவரால் அம்பாறை மாவட்டத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.