Header Ads



முஸ்லிம்களுக்கு கத்தோலிக்கர்களை கொல்ல வேண்டுமென்ற தேவை எப்போதும் இருக்கவில்லை - ஈஸ்டர் தாக்குதல் திட்டமிட்ட கொலையென ஆதாரபூர்வமாக நிரூபித்து காட்டுவேன் - ஹரின்

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சில முக்கியதகவல்களை இன்னும் சிலதினங்களில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் செயற்பாட்டாளர் ஹரின் பெர்ணான்டோ, இந்த தாக்குதல்கள் ஒரு திட்டமிட்ட கொலை என்பதை தான் ஆதாரபூர்வாக நிரூபித்து காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

பதுளையில் இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எம்மால் வழமையை போன்று சுவாசிக்க கூட முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் அவசியம் தானா? எமக்கு விருப்பமில்லாவிட்டாலும் , ராஜபக்ஷாக்கள் என்ற குடும்பத்தினருக்காக நாங்கள் இதனை செய்யவேண்டியுள்ளது. அவர்களது பலத்தை பாதுகாத்துக் கொள்ளவே இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க பற்றிக் கொண்டுள்ளார். அவரது தனிப்பட்ட சொத்தா ? இந்தக்கட்சி. ஒருமுறையாவது அவரால் ஜனாதிபதியாக வரமுடியவில்லை, பிரதமர் பதவியை பெற்றுக் கொடுத்தாலும், அதனை அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக உழைத்த மக்களுக்கு என்ன செய்வது. தொடர்ந்தும் அவரிடம் இது தொடர்பில் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை. அதனால் தான் நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த முறையில் செயற்படுவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலே அவர் தோல்வியடைவதற்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் ஒரு காரணமாக இருந்தன. இது உண்மையாகவே திட்டமிட்ட கொலையாகும். ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவும் சஜித்தை தோல்வியடையச் செய்வதற்காகவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதே இந்த தாக்குதல், எம்நாட்டு முஸ்லீம் மக்களுக்கு கத்தோலிக்க மக்களை கொலைச் செய்ய வேண்டும் என்ற தேவை  எப்போதும் இருக்கவில்லை.

இந்த தாக்குதல் தொடர்பில் உண்மைத் தகவலை நான் நாட்டுக்கு தெரியப்படுத்துவேன். இது தொடர்பில் எனக்கு சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்னும் சில தினங்களில் அதனை நான் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவேன். அதற்கு பின்னர் என்னையும் மறைந்த அமைச்சர் ஸ்ரீப்பதி சூரிய ஆராச்சியை போன்று வாகன விபத்தை ஏற்படுத்தி கொலைச் செய்ய முயற்சிப்பார்களோ தெரியவில்லை. அவ்வாறு நான் உயிரிழந்தாலும் ஆத்மாவாக  வந்து ராஜபக்ஷாக்களின் ஆட்சியை இல்லாதொழிப்பேன்.

மொணராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் புவனபாகு மன்னனுக்கு நிறைய மனைவிகள் இருந்ததாகவும் , அவருக்கு முஸ்லீம் மனைவி  ஒருவரும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.  தமது சகாக்களை பாதுகாப்பதற்காக இனவாத்தை முன்னிலை படுத்தியுள்ளார். இவர்கள் மொணராகலையில் சிங்கள மக்கள் மன்னிலையில் இவ்வாறு கூறும் இவர், முஸ்லீம் மக்கள் முன்னிலையில் கிரேண்பாசில் உங்களை தாக்கிய போது நான்தான் உங்களை காப்பாற்றினேன் என்று கூறுவார்.

மஹிந்த இரு முறை ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகித்தவர். தற்போதும் பிரதமராகவே பதவி வகிக்கின்றார். தொடர்ந்தும் அவர் வந்து என்ன செய்யப்போகின்றார். அரச ஊழியர்களுக்கு 60 வயதுக்கு தொழில் செய்ய முடியாது என்றால். அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் எவ்வாறு செயற்பட முடியும். இந்த அரசியல் முறையை இல்லாதொழிக்க வேண்டும். பதுளை மாவட்டத்தின் ஒன்பது ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிக் கொள்ளும். நாம் இளைஞர்களுக்கு முதலிடத்தை கொடுத்து செயற்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.