Header Ads



சகல பாலர் பாடசாலைகளையும் திறக்க அமைச்சரவை அனுமதி


(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளையும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் தற்போது குணமடைந்துள்ளனர். அதே போன்று கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளானவர்களிடமிருந்து சமூகத்திற்கு தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் அனைத்து பாலர் பாடசாலைகளையும் திறப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு கொவிட்-19 தொற்று சமூகத்திற்குள் பரவலடையாமல் தடுப்பதே பிரதான இலக்காகக்  காணப்பட்டது. கடற்படையில் தொற்றுக்குள்ளான அனைவரும் தற்போது குணமடைந்துள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 8,148 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட இந்த பரவல் சமூகத்தினுள் பரவாமலிருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். எனினும் அவர்கள் அனைவரையும் இரண்டாவது சுற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இரண்டாவது முறை முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளில் நோயாளர்கள் இனங்காணப்படக் கூடும். ஆனால் சமூகத்தினுள் தொற்று ஏற்படுவதை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம்.

No comments

Powered by Blogger.