மண்ணெண்ணெய் பட்ட சாரை பாம்பாக துடிக்கும் தயாசிறி - மைத்திரியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்
மகிந்த ராஜபக்சவை காட்டிக்கொடுத்த தயாசிறி ஜயசேகர போன்றவர்களுக்கு இம்முறை மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மைத்திரியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கு வாக்களிக்க வேண்டாம். தயாசிறி ஜயசேகர உடலில் மண் எண்ணெய் பட்ட சாரை பாம்பாக துடிப்பதாகவும் குருணாகல் மாவட்டத்தில் தன்னை விட ஒரு வாக்கை அதிகமாக பெற்று காண்பிக்குமாறும் அவருக்கு சவால் விடுத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு மைத்திரியிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒப்படைக்கும் போது கட்சியினரை பாதுகாக்குமாறு மகிந்த ராஜபக்ச கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
மைத்திரி என்ன செய்தார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்தார்.
அது மாத்திரமல்ல, மகிந்த ராஜபக்சவை நேசிக்கும் கட்சியினரை பழிவாங்கினார். மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்சவினரை பழிவாங்கினார். பழிவாங்க சட்டத்தை வளைத்தார். சட்டத்தை மாற்றினார். அப்படி செய்த மைத்திரி தற்போது எமக்கு பின்னால் வருகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களியுங்கள். ஆனால், பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் எமது கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டாலும் மகிந்த ராஜபக்சவை கைவிட்டு சென்றவர்களும் இருக்கின்றனர். இவர்கள் மைத்திரியுடன் இணைந்து பதவிகளை பெற்றுக்கொண்டு, மகிந்தவை விமர்சித்தவர்கள். இதன் காரணமாக மைத்திரியுடன் சார்ந்த எவருக்கு வாக்களிக்க வேண்டாம்.
மகிந்த ராஜபக்சவை கைவிட்டு, செல்லாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்பவர்களை மாத்திரம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.
கடந்த காலத்தில் அங்குமிங்கும் தாவி பதவி, சிறப்புரிமைகளை பெற்ற சிலர் இருக்கின்றனர். அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment