Header Ads



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், தேர்தல் பிரச்சாரத்தில் ஜனாதிபதி


தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகள் முகங்கொடுக்கும் உரம் மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது. கொடுப்பனவுகள் செலுத்தப்படாததால் உர இறக்குமதி தாமதமாகி உள்ளது. அறுவடைக்கு உரிய விலை மற்றும் சந்தை வாய்ப்புக்கள் கிடைக்காததால் விவசாயிகள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இப்பிரச்சினைகளை தீர்த்து விவசாயிகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி அவர்கள் கூறினார். 

அநுராதபுரம் மாவட்டத்தில் இன்று (03) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். 

தலாவ, தம்மென்னாவ சுதந்திரப் பூங்கா கிராமத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு கூடியிருந்த பிரதேச மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார். 

ஈரியகம குளத்தை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்குள்ள குறைபாடுகள் மற்றும் நீர் வழங்கல் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். நிலவுகின்ற பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் வதிவிட முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்தார். 

அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன, மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர். 

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கலாவெவ பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார். 

பிரதேசத்தின் வீதி புனர்நிர்மாணத்தின் தற்போதைய நிலைமை, விவசாய பயிர்ச் செய்கை தொடர்பாகவும் மக்களிடம் கேட்டறிந்துகொண்டார். 

அதனைத் தொடர்ந்து கடவர தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார். 

கெக்கிராவ நகரத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கும்புக் செவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். பொதுஜன பெரமுன வேட்பாளர் வீரசேன கமகேவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பிரதேசத்தின் மகாசங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், விவசாயிகள் முகங்கொடுத்துவரும் நீர் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் தனது அவதானத்தை செலுத்தினார். 

பல்வேறு இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களின் கலாசார பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் தெளிவுபடுத்தினர். 

கெக்கிராவ வியாபார சங்கத்தினால் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக தமது ஆலோசனைகளையும் எழுத்து மூலம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அங்குள்ள பிள்ளையார் கோவிலையும் மறுசீரமைத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார். 

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் டி.எம்.ஆர்.சிறிபாலவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு மிகிந்தளை, கல்குளமில் இடம்பெற்றது. அதில் பங்கேற்ற ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மகாசங்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அங்கு பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் தனது அவதானத்தை செலுத்தினார். 

மொஹான் கருணாரத்ன

1 comment:

  1. யாஅல்லாஹ் இந்த நாட்டுக்கு மிகவும் பொறுத்தமான ஆட்சியை தந்தருளுவாயாக.

    ReplyDelete

Powered by Blogger.