Header Ads



ஐரோப்பிய சங்கம் ஜனாதிபதிக்கு சாதகமாக பதிலளிப்பு


கொழும்பில் உள்ள தூதுவர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். 

தொற்று நோய் காரணமாக தோன்றிய சுகாதார ரீதியிலான சவால்களை முறியடிக்க பொதுமக்கள் சுகாதார சேவையை உடனடியாக ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சுகாதார பரிசோதகர்கள் மூலம் மிகச் சரியான முறையில் தொற்றுக்குள்ளானவர்கள் மட்டுமன்றி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களையும் அடையாளம் கண்டதுடன், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையில் வைரசை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு இந்நடவடிக்கையே காரணமாகியது. 

நாடு எதிர்நோக்கும் அடுத்த சவால் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தற்போது பொருளாதார அபிவிருத்தி வேகம் மிக கீழ் மட்டத்தில் உள்ளதாகவும் தேசிய கடன் தொகை உயர்வடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

இந்நெருக்கடியான நிலையை வெற்றிகொள்வதற்கு இறக்குமதியை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தாலும் இலங்கை மூடிய பொருளாதார நாடாக கருதப்பட மாட்டாது. 

உள்நாட்டு கைத்தொழிலை மேம்படுத்தும் தமது நோக்கம் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பல்வேறு உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென்பதையும் சுட்டிக்காட்டினார். அதனால் இக்கைத்தொழில் துறையை நவீனமயப்படுத்துவதே இலங்கையின் தற்போதைய தேவையாகும். சேதனப் பசளை, தரமான விதைகள் மற்றும் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெளிவுபடுத்தினார். 

உரிய களஞ்சிய வசதிகள் இல்லாததன் காரணமாக விவசாய உற்பத்திகளில் 40% வீதம் அளவில் அழிவடைகின்றது. அதனால் பதப்படுத்தல் மற்றும் புதிய உற்பத்திகளை உலர வைத்தல் முறைமைகளை முன்னேற்றும் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் கடன்களை அறவிடாமல் இருப்பது, இலங்கைக்கு நன்மைபயக்கக்கூடியதாக அமையுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்தும் கடன்களை பெற்றுக்கொள்ளுதல் மாற்றீடாக அமையாதென சுட்டிக்காட்டியதுடன், இலங்கைக்கு தற்போது தேவைப்படுவது புதிய முதலீடுகள் எனவும் தெரிவித்தார். 

சூரிய சக்தி மற்றும் காற்றின் விசையை பயன்படுத்தி உருவாக்கப்படும் மீள்சுழற்சி எரிபொருள் செயற்திட்டம் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் ஐரோப்பிய சங்க தூதுக்குழுவின் அவதானத்திற்குட்படுத்தினார். நாட்டில் இளைஞர் சமுதாயத்திற்கு புதிய தொழிநுட்பத்திற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட கல்வி முறைமையொன்றை ஏற்படுத்தும் தமது நோக்கம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஒன்லைன் முறைமையில் கல்விகற்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. அதிகளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இலங்கையினுள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தமது சட்ட வரைபுகளை தற்போது மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறது. 

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் செயற்பாடுகளுக்கு சாதகமாக பதிலளித்த ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள், தமது நாடுகள் இத்துறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பல்வேறு முறைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினர்


ஜனாதிபதி ஊடகப் பிரிவு
19.06.2020

No comments

Powered by Blogger.