Header Ads



சிறைச்சாலை பஸ் மீது தாக்குதலுக்கு திட்டம்..? ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு - STFஅதிரடி


ஹோமாகமவில் ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு; சிறைச்சாலை பஸ்ஸின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகம்

 சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்துவதற்கு பதுக்கிவைத்திருந்தாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை துப்பாக்கிகள் இன்று (29) ஹோமகம – பிடிபன பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹோமகம – பிடிபன ​ஹைலெவல் வீதியை அண்மித்துள்ள மொரகஹகென்ன வீதியில் அமைந்துள்ளா மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்தே ஒரு தொகை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக 11 துப்பாக்கிகளும் T-81 ரக துப்பாக்கியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் குறித்த பகுதியைச் சேர்ந்த பொட்ட கபில என அறியப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கும் சிறைச்சாலையில் உள்ள குற்றவாளியான ககன என்பவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மாத்தறை நகரில் இடம்பெற்ற தங்காபரண நிலைய கொள்ளைக்கு பொட்ட கபில மோட்டார் வாகனம் வழங்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அந்தக் கார் சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட கட்டடத்தை அண்மித்துள்ள வீதி அருகே இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

காரின் உரிமையாளரான பெண், கர்ப்பிணி என்பதால் குறித்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொட்ட கபில என்ற குறித்த சந்தேக நபரே இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை தங்காபரண நிலைய கொள்ளையின் பிரதான சந்தேக நபர் கொஸ்கொட தாரக என்பதோடு அவர் அதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவரையும் கொலை செய்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் கொள்ளையிடுவதற்கு முன்னர் மொரஹகஹேன பிரதேசத்தில் நான்கு மாதங்கள் கபில குமார என்பவருடைய வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.

கொஸ்கொட தாரக என்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவன் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 ஆம் திகதி அவரது சிறைக்கூடத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டது.

இந்த திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவிடமிருந்து நவீன ரக துப்பாக்கி மீட்கப்படுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல என்பதோடு தன்னியக்க துப்பாக்கியும் இதற்கு முன் மீட்கப்பட்டது.

துப்பாக்கிகள மீட்கப்பட்ட வியாபார நிலையத்தின் உரிமையாளரும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

News 1st

No comments

Powered by Blogger.