Header Ads



பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்ம பெற்று நிலையான அரசாங்கத்தை அமைக்கும்

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைகளுடன்  ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஒருபோதும்  இணைந்து செயற்பட முடியாது.  மைத்திரி - ரணில் தலைமையிலான  முரண்பாடான அரசாங்கத்தை போல  இம்முறையும் மக்கள் அதுபோன்றதொரு அரசாங்கத்தை தோற்றுவிக்கமாட்டார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத்தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தையும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமாக சிறிகொத்தாவையும் கைப்பற்றுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர்  சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது நகைப்புக்குரியது.    ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்பட முடியும்  என்று  தற்போது இவர்கள் குறிப்பிடுவதன் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள  வேண்டும்.

இரு வேறுப்பட்ட  கொள்கைகளை  கொண்ட  அரசியல் கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைத்து அதனை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது.

என்பது நல்லாட்சியில்  உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் ஊடாக  தெளிவுப்படுத்தப்பட்டது.  காலம்காலமாக இரு  வேறுப்பட்ட கொள்கைகளை கொண்ட  ஐக்கிய தேசிய கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து செயற்பட  கூட்டணியமைத்தும் வெற்றி பெறவில்லை. அரசியல் கொள்கையின் அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்  ஒரு கட்சிகளை  பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் முரண்பாடுகள்   முழு  நாட்டையும் இல்லாதொழித்தன.  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம்  இன்றும்  பல  கேள்விகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.  இன்றும்  இவ்விருவரும்   ஆணைக்குழுக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு  முரண்பாடான விதத்திலே  கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஜனாதிபதியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. இரு   தரப்பினரும் ஒருபோதும் ஒன்றினைந்து  அரசியல் ரீதியில் பயணிக்க முடியாது.   கடந்த அரசாங்கத்தை போன்று பலவீனமான அரச நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. முரண்பாடான  அரசாங்கத்தை ஒருபோதும் தோற்றுவிக்கமாட்டார்கள்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன  மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை பெற்று நிலையான அரசாங்கத்தை அமைக்கும். கடந்த கால தவறுகளை திருத்திக்  கொண்டு    ஜனாதிபதியின் 'சுபீட்சமான எதிர்காலம்' என்ற கொள்கையை முன்னெடுத்து செல்வது பிரதமர்மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பு என்றார்.

1 comment:

  1. தனது பொக்கட்டை நிறைக்க எல்லா இனங்களையும் காட்டிக் கொடுக்கும் ஒரு வக்காளத்து வாங்கும் டிராக்டர்.

    ReplyDelete

Powered by Blogger.