ராஜபக்சவுடன் சினேகமாகயிருந்தால், கருணாவுக்கு சட்டம் பொருந்தாதா..? சீறிப்பாயும் அநுரகுமார
ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
விநாயகமூர்த்தி முரளீதரனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும் என ஜேவிபியின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணா அம்மானின் கூற்றிற்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலர் இருபது முப்பது வருடங்கள் சிறையில் உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள ஜேவிபியின் தலைவர் மகிந்தவிற்கு நெருக்கமானவர்கள் சுதந்திரமாக நடமாடுவதுடன் பிரதி அமைச்சர் பதவிகளை பெறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவுடன் சினேகமாகயிருந்தால் அவரிற்கு சட்டம் பொருந்தாது என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அவர்கள் இயல்பாகவே தேசப்பற்றாளர்களாக மாறிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கருணாஅம்மான் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment