மோசடிகளுக்காரர்களே ரணிலை, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் - முஜிபுர் ரஹ்மான்
மத்திய கொழும்பு தொகுதி, வாழைத்தோட்டம் பிரதேசத்திற்கு நேற்றைய -17/06- தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விஜயம் செய்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில்,
2015 க்கு முன்னர் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாம் எதிர்ப்பார்த்தோம். ஆனால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சிலர் தடையாக இருந்தனர். அந்த தரப்பினரே, இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் ரணிலை வைத்திருக்கின்றனர். 11 வருடங்களாக தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்து பல சவால்களுக்கு முகம்கொடுத்து ஆட்சியை கைப்பற்றினோம். எனினும் நான்கரை வருடங்களிலேயே அதனை தக்கவைத்துக்கொள்ள முடியாத இயலாமையை நாம் தலைமையிடம் கண்டோம்.
26 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக இருந்து அவரால் கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல முடியாமல் முடியாமல் போனது. இதனால் நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னகர்த்தி செல்வதிலும் நாம் தோல்வியடைந்தோம். இதனால், புதிய தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கிய பயணமொன்றை மேற்கொள்ளவே நாம் அரசியல் ரீதியில் தீர்மானமொன்றை எடுத்தோம்.
வயதான ஒரு தலைமையை வைத்துக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வதா? அல்லது 53 வயதுடைய இளம் தலைமையொன்றுடன் இணைந்து பயணிப்பதா என்ற தீர்மானத்தை எடுக்க நேரிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 90 வீதமானோர் இந்த நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். நானும்,இளம் தலைமையுடன் இணைந்து நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கான அடுத்தகட்ட நகர்வை முன்னெடுப்பதற்கே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னோக்கிச் செல்வதற்கான தீர்மானத்தை எடுத்தேன் என்றார்.
Post a Comment