வீடு வாங்க உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், இனவாதத்தின் ஒரு வடிவம்தான்
இனவாதம் என்பது நிறத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல என தனது ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுக்க கறுப்பின மக்களின் போராட்டம் வெடித்துள்ளது.
இனவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் மனிதர்களிடையே பாகுபாடு காட்டப்படுவது குறித்த விவாதங்களை உலகம் முழுக்க ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், இனவாதம் என்பது தோலின் நிறத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல.
வேறு சமய நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பதாலேயே ஒரு சமூகத்தில் வீடு வாங்குவதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் இனவாதத்தின் ஒரு வடிவம்தான் என்று பதிவிட்டுள்ளார்.
இது அவரது சொந்த அனுபவத்திலிருந்து சொல்லப்பட்ட கருத்தா என்று செய்தி நிறுவனம் ஒன்று கேட்டதற்குப் பதிலளித்த இர்ஃபான் பதான், இது நான் கவனித்த விடயம். யாராலும் இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment