Header Ads



மொட்டுக்குள் மறைந்து பாராளுமன்றம், செல்ல முயற்சிக்கும் மைத்திரிபால - பிரசன்ன ரணதுங்க கடும் தாக்கு

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மொட்டு கட்சியில் மறைந்து பாராளுமன்றத்துக்கு செல்ல முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோாம்.

நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் இன்று நல்லவர்கள் போல் இருக்கின்றனர் என சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பியகம பிரதேசத்தில் இன்று -14- இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி 2015இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டை இழித்திருந்தது. மத்திய வங்கியை கொள்ளையடித்தார்கள். ராஜபக்ஷ் குடும்பத்தை சிறையிலடைத்தார்கள். தேரர்கள், இராணுவத்தினர், அரச ஊழியர்களை  பலிவாங்கினார்கள். நாட்டின் பொருளாதாரத்தை இல்லாமலாக்கினார்கள். 

தோற்கடித்த புலிகளை மீண்டும் தலைதுக்க இடமளித்தார்கள். அதன் விளைவாகவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் இணையத்தலங்கள் குறிவைக்கப்பட்டன.

இவ்வாறு புலிகளை நாட்டிலும் சர்வதேசத்திலும் போஷித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தவர்கள் இன்று சுத்தவாளிகள் போல் இருக்கின்றனர்.

அதேபோன்று ஏப்ரல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்திய புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்திருந்தது. கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் இதனை அறிந்திருந்தனர்.

பொலிஸ்மா அதிபர் அறிந்திருந்தார். ஆனால் அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தின் ஜனாதிபதி உட்ப அமைச்சர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின்பால் நாட்டுக்கு தீங்கு இழைத்த எந்த அரசாங்கமும் இலங்கை வரலாற்றில் இல்லை.

மேலும் அன்று நாங்கள் மொட்டு கட்சியை உருவாக்கும்போது எம்மை வீதி பூராகவும் அழையவிடுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆனால் அவ்வாறு தெரிவித்த அவர்  இம்முறை பாராளுமன்றத்துக்கு செல்ல மொட்டு சின்னத்திலே போட்டியிடுகின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு பக்கத்துக்கு இழுத்துக்கொண்டிருந்த ஜனாதிபதி, பிரதமரே இருந்தனர். அதனால் எனக்கு எதனையும் செய்ய முடியவில்லை. அதனால் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு,  வேலை செய்ய முடியுமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்தை பெற்றுக்கொடுக்கவேண்டும் என அவர் பிரசாரம் செய்து திரிகின்றார்.

எனவே மைத்திரிபால சிறிசேன மொட்டு சின்னத்தில் மறைந்து எப்படியாவது பாராளுமன்றத்துக்கு செல்ல முயற்சிக்கின்றார். அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் அவதானத்துடனே இருக்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.