Header Ads



890 மில்லியன் ரூபா செலவில் கல்கிசை செயற்கை கடற்கரை : விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றுக்கு மனு


(எம்.எப்.எம்.பஸீர்)

களுத்துறை - கெலிடோ கடற்கரை மற்றும் கல்கிசை கடற்கரைக்கு இடைப்பட்ட  கரையோர பிரதேசத்தில் செயற்கை கடற் கரையை அமைக்கும் பணியின்  ஒரு அங்கமாக, கல்கிசை பகுதியில் கரையோரத்தில் மணல் நிரப்பட்டு அவை கடல் அலைகளால் அள்ளுண்டு செல்லப்பட்டிருந்தன. 

இந் நிலையில், எந்த மதிப்பீடுகளும் அற்ற குறித்த செயற்றிட்டம் தொடர்பில்,  மத்திய சுகாதார அதிகார சபை மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஊடாக முறையான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடுமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் நீதிக்கான மையம்  இந்த மனுவை தாக்கல்செய்துள்ள நிலையில், அம்மனுவில் பிரதிவாதிகளாக  கரையோர பாதுகாப்புத் திணைக்களம்,  மத்திய சுற்றாடல் அதிகார சபை,  சுற்றாடல் அமைச்சர், மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த செயற்கை கடற்கரையை அமைக்கும் பணிகளுக்கான மணல் நிரப்பும் நடவடிக்கைகள்,  தேசிய சுற்றாடல் சட்டம்,  கரையோர பாதுகாப்பு சட்டம்,  உள்ளிட்ட சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றுள்ளனவா என விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என குறித்த மனுவில் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 2 கிலோ மீற்றர்கள் நீலம் மற்றும் 25 மீற்றர்கள் அகலம் கொண்ட  செயற்கை கடற்கரை உருவாக்கப்படவுள்ளதுடன், இதற்காக 3 இலட்சம் கன மீற்றர் மணல் பயன்படுத்தப்படவுள்ளது.  அத்துடன் சுமார் 890 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.