UK இல் குடியேறி 2 மாதங்களில் கொரோனாவுக்கு மரணமான Dr அலி - இதுவரை 15 முஸ்லிம் மருத்துவர்கள் மரணம்
பிரித்தானியாவில் குடியேறி இரண்டே மாதங்களில் என்.எச்.எஸ் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் ஃபர்கான் அலி சித்திகி, தமது குடும்பத்தின் நிலை கண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் குடியேறியவர்.
இங்கே மான்செஸ்டர் ராயல் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அதுவும் 2 மாத பயிற்சியில் இருந்து வந்துள்ளார்.
ஆறு பிள்ளைகளின் தந்தையான சித்திகி, பாகிஸ்தானில் சுமார் 10 ஆண்டு காலம் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
இளம் வயது பிள்ளைகள், மனைவி மற்றும் வயதான பெற்றோரை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே சித்திகி பிரித்தானியாவில் குடிபெயர்ந்துள்ளார்.
மான்செஸ்டர் ராயல் மருத்துவமனையில் பணியாற்றிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 4 வாரங்களாக மருத்துவர் சித்திகி அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச வசதியின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.
தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக சக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் 27,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், என்.எச்.எஸில் கொரோனாவுக்கு பலியாகும் 15-வது இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மருத்துவர் இவர் என கூறப்படுகிறது.
இதுவரை கொரோனாவுக்கு பலியான 110-கும் மேற்பட்ட என்.எச்.எஸ் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள், ஆசிய, கருப்பின, பூர்வ குடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஅல்லாஹ் அன்னாரின் அமல்களைப் பொருந்திக் கொண்டு ஜன்னதுல் பிர்தவ்ஸை அன்னாருக்கு அருளுவானாக. அன்னாரின் இழப்பையிட்டு வருந்தும் அவருடைய குடும்பத்துக்கு அவரைவிடச் சிறந்த ஒரு துணையை வழங்குவானாக. ஆமீன்.
ReplyDelete