ICCPR சட்டம் குறித்து எதிரும், புதிருமான வாதப்பிரதி வாதங்கள்
- சட்டத்தரணி எம். பஸ்லின் வாஹிட் -
ICCPR (ஐஸீஸீபிஆர் )இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதிருமான வாதப்பிரதி வாதங்கள் பொது மக்கள் இடத்தில் உளளன.
2007– 56 ஆம் இலக்க சட்டமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் (ICCPR).என்பதே இதன் விரிவான விளக்கம்.
திகன கலவரம்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற கைதுகள் போன்றன ஐஸீஸீபிஆர் சட்டமூலம் சம்பந்தமாக நம் நாட்டு மக்களிடத்தில் விழிபுணர்வை தோற்றுவித்தது . அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமய சுதந்திரம் சம்பந்தமான பிரிவுகளுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமையும் விதத்திலான சட்டதிட்டங்கள் உள்ளடக்கப்பட்டதான சட்டமூலமொன்று என்று இதனைக் கூறலாம்.
யுத்தம் காரணமாக ஒரு சில அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் எழ சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சட்ட திட்டம் ஒன்றுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.
இந்த அடிப்படையிலேயே இலங்கையில் 2007 ஆம் ஆண்டு முதல் ஐஸீஸீபிஆர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னர் அரசியல் யாப்பில் இல்லாதிருந்த சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிசெய்து கொள்ளவும் இச்சட்டமூலம் வழிவகுத்து.
திகன கலவரத்தின் பின்னர் அமித் வீரசிங்க உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டமை ஹசலக்க பிரதேசத்தில் தர்மசக்கரம் பதித்த உடையை அணிந்த காரணத்தில் மசாஹிமா என்ற பெண்மணி கைது செய்யப்பட்டமை, பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த விருதுபெற்ற எழுத்தாளரான சக்திக சத்குமார என்பவர் கைது செய்யப்பட்டமை,ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான வன்முறைகளில் ஒருசில கைதுகள் என்பவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த ரம்சி ராசிக் என்பவர் கைது செய்யப்பட்டமை என்பன இச்சட்டத்தின் கீழேயே நடந்தன.
முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையொன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் பொதுமக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தக்கூடியதென்றே சக்திகவுக்கு எதிரான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முகநூலில் பதியப்பட்டுள்ள ஒரு ஆக்கம் சிங்கள மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை உளவியல் ரீதியான யுத்தத்துக்கு தூண்டும் வகையில் கருத்துக்களை கொண்டு இருந்தமை ரம்சியின் கைதுக்கான காரணமாக கூறப்பட்டது.
இச்சட்டத்தின் 3 (1) பிரிவானது எந்தவொரு நபராலும் யுத்தத்தைத் தூண்டவோ, வேறுபடுத்தும் விதத்தில் எதிர்வாதம் புரியவோ, அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ, ஒன்று திரளுவதோ, இன, மத குரோதங்களை முன்னெடுப்பதோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3 (4) உப பிரிவில், “இந்த உறுப்புரையின் கீழ் உள்ள குற்றச் செயல் பாரதூரமானதும் பிணை வழங்கமுடியாததுமான குற்றமாகும். இத்தகைய குற்றச்சாட்டு புரிந்துள்ளதாக சந்தேகப்படும் அல்லது முறைப்பாடு சுமத்தப்பட்டுள்ள நபர் விசேட சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தினூடாகவேயன்றி வேறு நீதிமன்றங்களூடாக பிணையில் செல்ல முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3(1) பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் ஒருவருக்கு மேல் நீதிமன்றத்தை தவிர அதன் கீழுள்ள வேறு எந்த நீதிமன்றத்தாலும் பிணை வழங்க முடியாது.
சந்தேக நபரொருவரை கைது செய்ததும் முதலில் ஆஜர் படுத்தப்படும் நீதிமன்றமானது மஜிஸ்திரேட் நீதிமன்றம் என்று அழைக்கப்படும். பெரும்பாலான குற்றங்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவானுக்கு இருந்தாலும் பாரிய குற்றச் செயல்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. ICCPR இன் கீழ் கைது செய்யப்பட்டவருக்குப் பிணை வழங்கும் அதிகாரமும் இல்லை.
தர்ம சக்கரத்தை அணிகலன்களாக அணிபவர்களும் உள்ளனர் எனவே மசாஹிமாவில் கைதானது எந்த வகையிலும் நியாயப்படுத்த கூடியவர்களாக இல்லை .இச்சட்டத்தின் தவறாக பயன்படுத்திய ஒரு சந்தர்ப்பமாகவும் அவரின் கைதை உதாரணமாகக் கொள்ளலாம். ஏனெனில் அவரது ஆடையில் பொறிக்கப்பட்டிருந்தது வெறுமனே கப்பலில் உள்ள சுக்கான் என்பது தெளிவாகப் புரிந்த விடயம்.
இந்த சட்டத்தின் மூவின மக்களும் அவ்வப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின் பின்னர் அமித் வீரசிங்க உட்பட பலர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதலை நடத்திய பலரும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் செயல்கள் என்ற அடிப்படையிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றன.
ரம்சி ராசிக் என்பவரை தனிப்பட்ட ரீதியாக எனக்கு தெரியாது. ஓரிரு தடவை அவர் வேறொரு நிறுவன தேவைக்காக என்னிடம் வந்திருந்தாலும் சிறிது நேரமே அந்த அலுவல் நிமித்தம் கதைத்து உள்ளேன்.மூன்று மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்ற எழுத்தாற்றல் உடையவர் மட்டுமல்லாமல் அவரது தந்தையும் பிரபல ஊடகவியலாளர் ஆகும். அவரின் முகநூல் பதிவுகளை அவ்வப்போது வாசித்து உள்ளேன். புரட்சிகரமான சிந்தனை போக்குடன் தனக்கே உரித்தான பாணியில் எழுதுவார்.அவரின் கைதுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு ஆக்கத்தை பற்றி முகநூலில் நான் எனது எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஆக்கமானது இனங்களுக்கிடையே சில முறுகல் நிலையைக் கூட தோற்றுவிக்கலாம் என்ற கருத்தில் எனது பின்னூட்டல்ளை எழுதினேன். விடாப்பிடியாக தனது கருத்தில் அவர் இருந்தார் அதில் அடங்கியுள்ள சில விடயங்கள் முற்றிலும் பிழையானது என்று நான் கூறியும் அவர் ஏற்கவில்லை. அன்று அவரின் போக்கை மாற்றியிருந்தால் கைதினையும் தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து. இன்று அவரின் முகப்புத்தகத்தை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இன்ஷா அல்லாஹ் அவருக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.நிச்சயமாக நல்ல எண்ணத்தை நோக்கமாகக் கொண்டு தான் அவர் எழுதியிருப்பார்.
எனவே சில வேளைகளில் நாம் எழுதுவது சரி என எமக்கு பட்டாலும் இன்னொருவர் வாசிக்கும்போதே அதன் அர்த்தங்கள் தெளிவாகப் புரியும்.
ஒருவருக்குள்ள நோயின் தன்மை எவ்வாறானது என்பதை வைத்தியர்கள் தான் சரியாக புரிந்து கொள்வர் .அதேபோல் சட்டத்தின் பார்வையில் எழுதுவது எவ்வாறானது என்பதை துறை சார்ந்தவர்களே சரியாகப் புரிந்து கொள்வர். பல முகநூல் நண்பர்களுக்கு அவர்களின் பதிவுகளில் இருக்கும் ஆபத்துக்களை நான் எடுத்துக் கூறியுள்ளேன் .அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு திருத்தம் செய்த பலரும் உள்ளனர் ஒரு சிலர் விடாப்பிடியாக விளக்கத்தை கேட்டுக்கொண்டு இருப்பர் .
எது எவ்வாறு இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடும்போது நாட்டிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக அவை உள்ளதா என்பதனையும் கருத்தில் கொள்ளுதல் பாதுகாப்பானது. இந்த இனங்களுக்கு இடையிலான குரோதத்தை உருவாக்கும் செயற்பாடானது எத்தகையது என்பதை விளக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன அதன் அளவை குறிப்பிட முடியாமல் உள்ளது. ஆகவே இச்சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு அது பெரும் உறுதுணையாக உள்ளது என்பது எனது கருத்து.
அதே போல் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சு, கருத்து ,மத சுதந்திரமானதுஎந்தவொரு நபருக்கும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்குரிய சுதந்திரத்தையும், நம்பிக்கை கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய சுதந்திரத்தையும் வழங்கி உள்ளது.வழங்கப்பட்டுள்ள உளச் சுதந்திரத்தின் அடிப்படையில் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் சிந்திப்பதற்கும், எந்தவொரு மதத்தையும் ஒழுக்கப்பண்புள்ள எந்தொவரு சிந்தனையையும் பின்பற்றுவதற்குரிய உரிமையும் உள்ளது.
எனினும் அடுத்தவருக்கு பாதிப்பேற்படாதவாறே அவற்றை அனுபவிக்க வேண்டும். அடுத்தவரின் சுயகௌரவத்தைப் பாதிக்காதவாறும் அவர்களது உரிமைகள் பேணப்படும் வகையிலுமே நடந்துகொள்ள வேண்டும்.
Post a Comment