ரொஷான் ரணசிங்க மாட்டு அரசியலில் ஈடுபடுகிறார் - மைத்திரிபாலவின் சகோதரர் குற்றச்சாட்டு
ஒரு கிலோ கிராம் அரிசியை 98 ரூபாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட முழுமையான இணக்கத்தின் அடிப்படையிலேயே ஒரு கிலோ கிராம் நெல்லை தான் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்தாகவும் ஒரு கிலோ அரிசியை 90 ரூபாவுக்கு விற்பனை செய்யுமாறு அரசாங்கம் தற்போது கூறுவது அநீதியானது எனவும் அரலிய அரிசி நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையினர் அரலிய அரிசி ஆலையில் நேற்று நடத்திய சோதனையின் போது அதிகார சபையின் அதிகாரிகளிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
50 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்து அரிசியை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியாது என்றால் நான் என்ன செய்து என்று நீங்கள் கூறுங்கள்.
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் முன்வைப்பது அநீதியான கோரிக்கையல்ல.அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி 98 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்யவே நாங்கள் நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்தோம்.
நெல்லை கொள்வனவு செய்து, அதனை களஞ்சியப்படுத்தி வைத்து, அதற்கு வட்டி அதிகரித்து, அனைத்தையும் செய்து, உற்பத்தி செலவு அதிகரிக்கும் போது, அரசாங்கம் அரிசியின் விலையை 90 ரூபாவாக குறைக்கும் போது, அரிசி ஆலையை மூடி விட்டு சிறைக்கு செல்ல நேரிடும்.
நான் இதற்கு இணங்க மாட்டேன். ரொஷான் ரணசிங்க தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் மகாவலி அமைச்சர் என்றால், நெல் விற்பனை சபை அவருக்கு கீழ் உள்ளது என்றால், அவர் பொலன்நறுவையின் அமைச்சர் என்றால், முதலில் அரிசியின் விலையை அதிகரிக்க வேண்டும்.
அரிசியின் விலையை குறைக்கும் போது நெல்லின் விலை குறையும் என்பதை நெல் விற்பனை சபைக்கு பொறுப்பான அமைச்சருக்கு தெரியாதா? ரொஷான் ரணசிங்க இப்படியான மாட்டு அரசியலில் ஈடுபடுகிறார் எனவும் டட்லி சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment