Header Ads



உலகின் கொடூரமான தீவிரவாதிகளுக்கு, எதிராகவே யுத்தம் மேற்கொண்டோம் - பிரதமர் மஹிந்த

புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்த வெற்றியின் 11ஆவது ஆண்டுப் பூர்த்தியை நாம் மே மாதம் 19ஆந் திகதி கொண்டாடுகிறோம்.

அது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு யுத்தம் அல்ல, மாறாக அமெரிக்காவின் எப்.பீ.ஐ. நிறுவனத்தினால் உலகின் கொடூரமான தீவிரவாதிகள் எனப் பெயரிடப்பட்ட அமைப்பொன்றுக்கு எதிரான யுத்தமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

புலிகள் அமைப்பின் தோல்வி காரணமாக தற்போது தமிழ் மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழ் சிறுவர்கள், புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை. தமிழ் அரசியல்வாதிகள் புலிக் கொலையாளிகள் தொடர்பான அச்சத்துடன் வாழ்வதில்லை.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமை மூலம் முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய அந்த முப்படையினரும், பொலிஸாரும் இன்று கோவிட் 19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கை கோவிட் 19 போராட்டத்திலும் வெற்றியடைந்து வருகிறது என்பதே அனைத்து விடயங்கள் ஊடாகவும் அவதானிக்க முடிகிறது.

பொதுமக்கள் மத்தியில் நோய் பரவுவதனைத் தடுப்பதற்கு முப்படையினரும், பொலிஸாரும் ஒரு பட்டாளம் போன்று முன்நின்று ஆற்றும் பணி, கோவிட் 19 நோயை இவ்வாறு கட்டுப்படுத்துவதில் சுகாதாரப் பிரிவினருக்கு மிகவும் உறுதுணையாய் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

தீவிரவாதம், வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய் போன்ற எந்தவொரு அனர்த்த சூழ்நிலையிலும் முப்படையினர் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் முன் நின்று செயற்படுகின்றனர் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகிறது.

அதனால் இன்று சமூக மட்டத்தில் 'சிவில்' மற்றும் 'இராணுவம்' என செயற்கையான பிளவொன்றை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ள வஞ்சகமான முயற்சியை நான் கண்டிக்கிறேன்.

ஏதாவது பதவியொன்றுக்கு ஓய்வு பெற்ற முப்படை அதிகாரியொருவரை நியமிக்கும் போது அதனை அவர்கள் 'இராணுவ மயமாக்கல்' என அழைக்கின்றனர். ஓய்வு பெற்ற முப்படையினரும் சிவில் பிரஜைகளே.

அவர்கள் இராணுவ உறுப்பினர்கள் அல்ல. அன்று இருந்த சங்க, மருத்துவர், ஆசிரியர், உழவர், தொழிலாளி சக்தியுடன் இன்று படையினரும் இணைந்துள்ளனர்.

எனவே நிச்சயமாக எமது அரசாங்கம் அதிகாரத்திலுள்ள போது பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அரசாங்கத்தில் பல்வேறுபட்ட பதவிகளை வகிப்பார்கள்.

ஜனநாயக முறைமைக்கு அப்பால் வந்த அனைத்து சவால்களையும் தோற்கடித்து, இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை அடிப்படையிலான இறையாண்மை அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு முப்படையினரும், பொலிஸாரும் ஆற்றியுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணியையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர வேண்டும்.

முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கம் எமது முப்படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமை, முப்படையில் தற்போது பணியாற்றுகின்ற மற்றும் ஓய்வு பெற்ற அதிகளவான வீரர்களை வேட்டையாடி, அவமானத்திற்கு உட்படுத்தியமையினை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நாம் மீண்டும் உறுதியளிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. புலிகள் மனச்சாட்சியே அற்ற
    கொடூரமான,பிணந்தின்னிகள்

    ReplyDelete

Powered by Blogger.