ஷங்ரிலா ஹோட்டலில் ஒத்திகை பார்த்த குண்டுதாரிகள்
- Hiru News -
ஏப்ரல் 21 ஷங்ரிலா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய குண்டுதாரிகள், அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், அந்த விருந்தகத்திற்கு சென்று தாக்குதல் குறித்த ஒத்திகை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் ஜே.எம். மஹிந்த ஜயசுந்தர நேற்று சாட்சியமளித்தபோது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னதாக ஏப்ரல் 17 ஆம் திகதி, ஷங்ரிலா விருந்தகத்தில் அறை ஒன்றை முன்பதிவு செய்வதற்காக மொஹமட் ஹம்ஷாட் என்ற நபர் அங்கு சென்றிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், சினமன் க்ராண்ட் விருந்தகத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் என்பவரே போலியான பெயரில் அங்கு அறையை முன்பதிவு செய்திருந்தாக விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஷங்ரிலா விருந்தகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹஸீம் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் ஆகியோர், தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஷங்ரிலா விருந்தகத்திற்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும், தாக்குதல் தொடர்பான ஒத்திகைக்கு அங்கு சென்றிருந்தாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment