சர்வதேச நிவாரண நிதிகள், இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை - பிரதமர் மஹிந்த தெரிவிப்பு
(இராஐதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக சர்வதேச நிவாரண நிதிகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. அரசாங்கத்திடம் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று -04- பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
சர்வதேச நிதி நிவாரணம் கிடைக்கப் பெற்றதாக எதிர்தரப்பினர் ஆதாரமற்ற விதத்தில் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
சர்வதேச நிதி நிவாரணம் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என பிரதமர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் உலக வங்கி 127 மில்லியன் வழங்க தீர்மானித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுஎன நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல குறிப்பிட்டார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் தங்களின் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத இளைஞர்களை பாதுகாப்பான முறையில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
வடக்கு ,கிழக்கு பிரதேசங்களில் வாழும் கூழித்தொழிளாலர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரண தொகையினை அதிகரிக்குமாறும் குறிப்பிட்டார்கள்.
53 ஆயிரம் பேர் இதுவரையில் தங்களின் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு பதிவு செய்துள்ளார்கள். பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் இதன்போது தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களது கேள்விகளுக்கு பதில் வழங்க பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
Post a Comment