Header Ads



ரஹ்மத்துடைய ரமழானில், இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்…!


ஜெனீவாவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த கொழும்பைச் சேர்ந்த ஜிப்ரியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன். சகலருடனும் அன்பொழுகப் பழகிய மர்ஹும் ஜிப்ரி, நாடிவருவோருக்கு உதவி புரிந்து, பல வழிகாட்டல்களை வழங்கியவர். ஜெனீவாவுக்கு வரும் உறவினர், நண்பர், தெரிந்தோர், தேடிவருவோரை ஆரத்தழுவி, அணைத்து ஒத்தாசைகளை வழங்கும் பெரும்பண்பாளனின் இழப்பு, எனது நிம்மதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதை நான் உணர்கிறேன்.

ஜெனீவா சென்ற போதெல்லாம் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, உபசரிப்பதுடன் எமது நாட்டு நிலைமைகளையும் கேட்டறியும் சமூகப்பற்றாளன். மர்ஹூம் ஜிப்ரியின் நாட்டுப்பற்று, சமூக அக்கறைகளுக்கு இது பெரும் நற்சான்று.

நான் மட்டுமல்ல என் போன்ற பலர் மர்ஹும் ஜிப்ரியின் சகவாசத்தை இழந்து நெஞ்சுருகி நிற்கின்றோம். அவரது நற்பண்புகளின் ஆளுமைகள் எம்மை விட்டு விலகிச் செல்ல நெடுங்காலமெடுக்கும். நல்லவர்களின் ஆத்மாக்களை ஆண்டவன் பொறுப்பெடுப்பான் என்ற நம்பிக்கை மாத்திரமே அவரது பிரிவில் நாமடையும் ஆறுதலாகும்.

மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாத அற்ப ஆயுளையுடைய நாம், லௌகீக மோகத்தில் மூழ்காது, மறுமை வாழ்வுக்கான ஈடேற்றங்களில் ஈடுபடுவதே இப்புனித ரமழானில் எமக்குப் பயன் தரும்.

கொரோனா தொற்றாளர்களின் ஜனாசாக்கள் இலங்கையில் எரிக்கப்படுகையில், உலக சுகாதாரத் தலைமையகம் அமைந்துள்ள ஜெனீவாவில் ஜிப்ரியின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை ஆறுதலளிக்கிறது.

ஜனாசாவுக்கான நான்கு கடமைகளும் (குளிப்பாட்டுதல், கபனிடல், தொழுவித்தல், நல்லடக்கம் செய்தல்) முறையாகப் பின்பற்றப்பட்டு, அடக்கம் செய்யும் சூழ்நிலை எமது நாட்டிலும் ஏற்பட அல்லது ஏற்படுத்த, எமது பிரயத்தனங்களை அதிகரித்து, பிரார்த்தனைகளைக் கூட்டிக்கொள்வதே இன்று எமக்குள்ள வழிகளாகும்.

 ரிஷாட் பதியுதீன் 
தலைவர் 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

1 comment:

Powered by Blogger.