Header Ads



அரச விடுமுறை தினங்களில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டமை சரியா..?


வேட்புமனுக்கள் கையேற்கப்பட்ட சில தினங்கள் அரச பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையால், ஏற்கப்பட்ட வேட்புமனுக்களின் செல்லுபடித்தன்மை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு சட்ட மா அதிபர் இன்று பதில் வழங்கியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்ச் மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளை விசேட அரச பொது விடுமுறையாக அறிவித்து வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுந்துள்ள சிக்கல் தொடர்பில் இன்று ஆராய்ந்ததாக சட்ட மா அதிபரால் அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலுக்குரிய வேட்புமனுக்களை ஏற்று, அது தொடர்பான ஆரம்பகட்ட செயற்பாடுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதை தாம் அவதானித்ததாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்புலத்தில், 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தற்போதுள்ள சட்டங்களைப் பின்பற்றி முன்னெடுத்து செல்லுமாறு சட்ட மா அதிபரால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.