Header Ads



யார் இந்த, நானா அஸ்மா...?

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

18-ஆம் நூற்றாண்டு...

இன்று நைஜீரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி அது. மிக பரந்த அந்த நிலப்பரப்பை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் உஸ்மான் டான் போடியோ. தன்னுடைய சிறிய பகுதியை சிறப்பான முறையில் நிர்வகித்து கொண்டிருந்தார் உஸ்மான். இஸ்லாம் குறித்த அவருடைய தெளிவான பார்வை மக்களுக்கு சிறந்ததொரு நிர்வாகத்தை அளிக்க ஏதுவாய் இருந்தது.

இத்தகையவருக்கு 1793-ஆம் ஆண்டு மகளாக பிறந்தார் நானா அஸ்மா (Nana Asma'u). நபியவர்களின் கஷ்ட காலங்களில் உறுதுணையாக இருந்த நபித்தோழியான அஸ்மா (ரலி) அவர்களின் நினைவாகவே அவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. சிறு வயதிலேயே தன் தாயை இழந்த அஸ்மா, தன் சித்திக்களின் பொறுப்பில் வளர்ந்தார். எந்தவொரு விசயத்தையும் குர்ஆனின் ஒளியில் பார்க்கும் அத்தகைய பெண்மணிகளின் வளர்ப்பில் சிறப்பான கல்வி கொடுக்கப்பட்டார். இளம்வயதிலேயே ஓரிறைக்கொள்கை குறித்த தெளிவான எண்ணங்கள் அஸ்மாவுக்கு ஏற்றிவைக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர் வரலாற்றாசிரியர்கள். 

நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அஸ்மாவின் வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் தலைப்பட ஆரம்பித்தன. அதற்கு காரணம் உஸ்மான் டான் போடியோவின் தீவிர இறைப்பணி. சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் இஸ்லாமை நோக்கி மக்களை அழைப்பதில் தவறியதில்லை உஸ்மான். தன் இடத்தை விட்டு வெகு தூரம் சென்று பல்வேறு நிலப்பரப்புகளில் இஸ்லாமை எடுத்துக் கூறுவார். கால்நடை மேய்ப்பவர்கள், வியாபாரிகள், மார்க்கெட்கள் என்று யாரையும், எந்த இடத்தையும் விட்டதில்லை. இறைவனின் கிருபையால், உஸ்மானின் அழைப்பு பணிக்கு மகத்தான வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கையும், இஸ்லாமை சரிவர புரிந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர ஆரம்பித்தது. 

வெளியேற்றம்:

இந்த சூழ்நிலை, அந்தந்த நிலப்பரப்பு ஆட்சியாளர்களை கடுமையாக கோபம் கொள்ள செய்தது. முடிவோ, பெரும் விபரீதமாக அமைந்தது. உஸ்மானின் குடும்பம், ஆதரவாளர்கள் என்று அனைவரும் கூண்டோடு கூண்டாக தங்களுடைய நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் (21st Feb 1804).

இது மிக சோதனையான காலக்கட்டம். பல மக்கள் பாலைவனத்தின் கொடுமை, பசி, நோய் காரணமாக போகும் வழியிலேயே இறந்தனர். இத்தகைய சூழ்நிலை உஸ்மானை நிலைக்குலைய செய்தது. ஆனால் வரலாற்றின் ஒரு சம்பவம் அவருக்கு பக்கபலமாக நின்றது. ஆம், நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய அந்த நிகழ்வு தான். இஸ்லாமின் வரலாற்றில் மறக்கவே முடியாத அந்த நிகழ்வை தற்போது தனக்குள் பிரதிபலித்து கொண்டே இருந்தார் உஸ்மான். இது இறைவனின் சோதனை, எப்படி சோதனைகளுக்கு பிறகு மக்கா முஸ்லிம்களின் வசம் வந்ததோ, அது போல, தங்களுக்கும் இறைவன் உதவுவான் என்று தீர்க்கமாக நம்பினார்.

வெற்றி:

உஸ்மானின் அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. வெளியேறியவர்கள், உஸ்மானின் மகனான முஹம்மது பெல்லோ தலைமையில் படை திரட்டினார்கள், போரிட்டார்கள். கடுமையான சண்டைகளுக்கு பிறகு பெல்லோ தலைமையிலான படை எதிர்தரப்பை வீழ்த்தியது (3rd October 1808). பல்வேறு பகுதிகளையும் இணைத்து சொகாடோ சாம்ராஜ்ஜியம் உருவானது.

பேரரசு உருவான போது நானா அஸ்மா அவர்களுக்கு பதினைந்து வயது. அப்போது குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்திருந்தார், நான்கு மொழிகளில் (Arabic, Fulfulde, Hausa, and Tamachek) புலமை பெற்றிருந்தார், இஸ்லாமிய சட்டதிட்டங்களில் தீர்க்கமான ஞானம் பெற்றுக்கொண்டிருந்தார், தன் சகோதரர் பெல்லோவின் நண்பரான ஜிடாடோவை திருமணமும் முடித்திருந்தார்.

கூடவே கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தார். அந்த கவலை தன் மக்களை/அரசை பற்றியது. அரசாங்கத்தின் முன்னால் கடுமையான சவால்கள் காத்திருந்தன. பசி, நோய், ஏழ்மை, இஸ்லாமை ஏற்ற பூர்வகுடிமக்களை முஸ்லிம் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பது என்று இப்படி பல பல சவால்கள்.

1817-ஆம் ஆண்டு, உஸ்மான் இறந்த போது விவகாரங்கள் மேலும் பெரிதாகின.

ஆட்சி பொறுப்பை ஏற்ற முஹம்மது பெல்லோ தன் தங்கையின் திறமை மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரை முழுவதுமாக நம்பினார். நாட்டின் பெண்களின் நிலை மாறவேண்டும். மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு அஸ்மாவின் உதவி நிச்சயம் வேண்டும். ஆனால், தங்கையின் மனநிலை அவருக்கு மிகுந்த கவலையை தந்தது. குர்ஆனின் உதவியுடன் தன் தங்கையை அணுக ஆரம்பித்தார்.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது - குர்ஆன் 94:5

தன் தங்கையிடம் உற்சாகத்தை வரவழைக்க இதுப்போன்ற வசனங்கள் அவருக்கு பெரிதும் உதவின. "உன் இறைவன் வலிமையானவன் என்று தெரிந்தும் நீ கவலைக்கொள்கின்றாயா?", "தன் மீது நம்பிக்கை கொண்டவரை இறைவன் நிராகரிப்பான் என்று எண்ணுகின்றாயா?" - இதுப்போன்ற கேள்விகளையும் தன் தங்கையை நோக்கி கேட்பாராம் பெல்லோ.

கல்வி புரட்சி:

அவருடைய பிரார்த்தனை பொய்யாகவில்லை. உற்சாகத்துடன் எழுந்த நானா அஸ்மா மாபெரும் புரட்சிக்கு அடிக்கோல ஆரம்பித்தார்.

ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படவேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு மார்க்க அறிவு தெளிவாக போதிக்கப்பட வேண்டும். இது தான் அஸ்மாவின் அடிப்படை எண்ணமாக இருந்தது.

பசி மற்றும் நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே கல்வியை போதிக்க வேண்டும். பாடத்திட்டங்கள் எளிமையாக இருக்கவேண்டும். நாட்டின் பெண்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களின் அறியாமையை போக்க வேண்டும். அவர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

திட்டமெல்லாம் ஓகே. எப்படி செயல்படுத்துவது?

முதலில் உதவி தேவைப்படும் கிராமங்கள் மற்றும் ஏனைய பகுதிகளை கணக்கிட ஆரம்பித்தார். அந்த கிராமங்களில் நற்பண்புகள் மிக்கவர்களாக கருதப்பட்ட பெண்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தன் வீட்டில் கல்வி, ஒழுக்கம் குறித்த பயிற்சியை தொடங்கினார் (அஸ்மாவின் அந்த வீடு இன்றும் உள்ளது).

நான் முன்னமே கூறியது போன்று அஸ்மா அவர்கள் ஒரு அசாத்திய திறமைசாலி. இறையச்சம் சார்ந்த அற்புத பண்புகளை அவரால் தன் மாணவர்களிடையே எளிதாக கொண்டுவர முடிந்தது. இப்படியாக அஸ்மாவினால் உருவாக்கப்பட்டவர்களுக்கு "ஜாஜிக்கள் (jajis)" என்று பெயர். ஜாஜி என்றால் பொறுப்பாளர் என்று பொருள் கொள்ளலாம். கல்வி பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஜாஜிக்கள் தற்போது தங்கள் ஊர்களுக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க வேண்டும். 

இந்த ஜாஜிகளுக்கு துணையாக இருந்தது அஸ்மாவிடம் இருந்து அவர்கள் கற்ற கல்வியும், நபிமொழிகளும் தான். வீடுகளுக்கே சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க ஆரம்பித்தார்கள். பெண்கள் குறித்த குர்ஆன் வசனங்களை சத்தமாக ஓதி காட்டுவார்கள். அது அடுத்தடுத்த வீடுகளிலும் எதிரொலிக்கும். அந்தந்த வீட்டு பெண்கள் இந்த வசனங்களை திரும்ப ஓதி காட்டுவார்கள். இப்படியானது ஒரு யுக்தி.

பெண்களின் கஷ்டங்களை அஸ்மாவின் பார்வைக்கு கொண்டுவந்தார்கள். அவற்றை பொறுமையாக கேட்டறிந்தார் அஸ்மா. உடனுக்குடன் தீர்த்து வைக்கவும் செய்தார். அஸ்மாவின் இத்தகைய நடவடிக்கைகள் பெண்களிடையே பெரும் புரட்சியை உருவாக்கத் தொடங்கின. பெண்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை அவரால் கொண்டுவர முடிந்தது. பிரச்சனைகளை ஜாஜிக்கள் மூலமாக எளிதாக கையாள முடிந்தது. அவர் எதிர்ப்பார்த்த சகோதரத்துவம் மேலோங்க ஆரம்பித்தது.

தன் மாணவர்களான ஜாஜிக்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் அஸ்மா. தன் அன்புமிக்க தோழிகள் என்றும், புத்திசாலிதனம் மற்றும் கடமையில் சிறந்தவர்கள் என்றும் அவர்களை குறிப்பிட்டார் அஸ்மா. ஆசிரியர்-மாணவர் உறவுக்கு அஸ்மாவும் ஜாஜிக்களும் மிக சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையில்லை.

ஒருவர் தன் வாழ்நாளிலேயே தன்னுடைய எண்ணங்கள் வெற்றி பெறுவதை பார்ப்பது இறைவனின் மகத்தான கிருபை. அந்த வகையில் அஸ்மா ஒரு அதிர்ஷ்டசாலியே. கட்டுக்கோப்பான சமூகம் உருவாக எண்ணம் கொண்டார். தெளிவான சிந்தனைகள் அடிப்படையில் காய் நகர்த்தி மாபெரும் வெற்றியும் கண்டார்.

I taught them what, in the Faith of Islam, is permissible And what is forbidden, so they would know how to act. I said they must distance themselves from sins such as lying, meanness, hatred and envy, Adultery, theft and self-esteem. I said they should repent Because these things lead to perdition. My women students and their children are well known for their good works. And peaceful behaviour in the community - Nana Asma'u
அவர்கள் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்காக, இஸ்லாம் அனுமதித்த மற்றும் அனுமதிக்காத விசயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். பொய், கயமைத்தனம், தீண்டாமை, பொறாமை, விபச்சாரம், திருட்டு போன்றவற்றிலிருந்து விலகி நிற்குமாறு கூறினேன். தவறு செய்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்க சொன்னேன். என்னுடைய மாணவியர்களும், அவர்களின் பிள்ளைகளும் தங்களுடைய சமூக பணிகளுக்காகவும், அமைதிக்காகவும் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்கள் - நானா அஸ்மா

புரட்சிக்கு வித்திட்டு, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா 1864-ஆம் ஆண்டு மறைந்தார். இறைவன் அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை தந்தருள்வானாக...ஆமீன்.

நானா அஸ்மாவின் தாக்கம் அன்று எப்படி இருந்ததோ அதுபோலவே நைஜீரிய பெண்களிடம் இன்றும் இருக்கின்றது. பெண்களின் முன்னேற்றம் குறித்த தங்கள் எண்ணங்களுக்கு அஸ்மாவின் பாடத்திட்டங்கள் என்றென்றும் துணையாக இருப்பதாக கூறுகின்றனர்.

The aim of FOMWAN is to upgrade the status of Muslim women through increasing their religious awareness and education - exactly what Nana Asma’u did. She mobilised women and brought them together, she taught and reformed them making them better members of society. Our inspiration came from her and we look on her as a model. Whatever we achieve is indigenous. Our ideas do not come from USA, nor the UK, nor from Saudi Arabia. We have our model here. We may learn from others but our upbringing, our development is through Nana Asma’u - Sa’adiyar Omar, Federation of Muslim Women’s Associations of Nigeria [FOMWAN].
முஸ்லிம் பெண்களிடையே மார்க்க விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரித்து அவர்களது நிலையை முன்னேற்றம் அடையச் செய்வதே "நைஜீரிய முஸ்லிம் பெண்கள்" கூட்டமைப்பின் நோக்கமாகும் - ஆம், அஸ்மா என்ன செய்தாரோ அதே தான். அவர் பெண்களை ஒருங்கிணைத்தார், கல்வி கொடுத்தார், அவர்களிடையே சீர்த்திருத்தம் மேற்கொண்டு சமூகத்தில் சிறந்த மக்களாக மாற்றினார். எங்களுடைய ஐடியாக்கள் அமெரிக்காவில் இருந்தோ, பிரிட்டனில் இருந்தோ, சவூதி அரேபியாவில் இருந்தோ வரவில்லை. எங்களுக்கான முன்னுதாரணம் இங்கேயே உள்ளார். நாங்கள் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றோம், அதே நேரம் எங்களுடைய வளர்ப்பு, முன்னேற்றம் எல்லாம் அஸ்மாவிடமிருந்தே வருகின்றன - ஸாதியார் உமர், நைஜீரிய முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு.

இறைவா, நானா அஸ்மா போன்ற பெண்களை எங்கள் சமூகத்திற்கு மேலும் மேலும் அதிகரித்து தருவாயாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

ஆஷிக் அஹமத் அ

1 comment:

  1. அல்லாஹு அக்பர்...அல்லாஹ் மிக பெரியவன்....

    ReplyDelete

Powered by Blogger.