Header Ads



வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம் - பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்

தென்கிழக்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 17ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 610 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 11.30 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.10 E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. 

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக விருத்தியடைவதுடன் மே 18ஆம் திகதி காலையளவில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

அது ஆரம்பத்தில் 17ஆம் திகதி வரை வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடக்கு – வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடமேல் மாகாணத்தில்ப ல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

மழை நிலைமை: கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பு முதல் மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

No comments

Powered by Blogger.