கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத, குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு ஏற்பட்ட நிலை
கொரோனா தொற்று பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார, சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலர் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார். அதன்படி குருணாகல் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக, அவ்வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக செயற்பட்ட வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் அண்மையில், பணிப்பாளர் சரத் வீரபண்டாரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர். அவரை அவ்வைத்தியசாலையில் இருந்து மாற்றும் வரை தாம் அத்தியாவசிய பணி தவிர வேறு பணிகளில் ஈடுபட போவதில்லை என அவர்கள் கூறினர்.
இவ்வாறான பின்னணியிலேயே, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக கூறி, அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் வைத்தியர் சரத் வீரபண்டார, தனது இடமாற்றத்துக்கு எதிராக சுகாதார அமைச்சின் செயலருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளதுடன், தனக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.
இது குறித்து சுகாதார அமைச்சின் செயலர் பத்ரானி விஜேதிலகவை கேட்ட போது, 'சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.' என தெரிவித்தார்.
Arasan andru kolvaan, Deivam Nindru Kollum
ReplyDeleteThe mills of God grind slow but sure
ReplyDelete