Header Ads



நாம் கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டே கடந்து செல்லவேண்டியுள்ளது

(ஆர்.யசி)

எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்த சாத்தியங்கள் அதிகம் உள்ளன. எனவே திங்கட்கிழமை முதல் வழமையாக செயற்பாடுகள் ஆரம்பமாவது குறித்து மக்கள் நம்பிக்கை வைக்கலாம் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களதில் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்று நிலைமையையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும் முன்னெடுக்காத வகையில் பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம்.

அத்துடன் கொவிட் -19 வைரஸ் பரவல் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் மூலமாக மிகச் சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட அச்றுத்தல் என கருதிய பிரதேசங்களில் கூட கொவிட் -19 வைரஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள காரணத்தினால் சமூக பரவல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும் சுகாதார அதிகாரிகளின் முழுமையான ஆலோசனைகளை தொடர்ந்தும் பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாம் கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டே கடந்து செல்லவேண்டியுள்ளது. அதேபோல் எமது எதிர்காலத்தை பலப்படுத்த பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தே ஆகவேண்டும். எம்மை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் கூட இப்போது இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் நாமும் எமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தாக வேண்டும்.

ஆகவே எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்க முடியும். அடுத்து வருகின்ற நான்கு நாட்கள் கட்டுப்பாடுகளுடன் நிலைமைகளை கையாண்டால் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்றார்.

2 comments:

  1. கொரானாவுடன் வாழ முடியும் என்றால் என்னத்துக்கடா ஜனாசாவை எரிக்கின்றனர்

    ReplyDelete
  2. கொரோனா வந்தவழியில் சென்றுவிடும். இந்த தொந்தரவு வாயை மூடிக் கொண்டிருந்தால் இந்த நாட்டு மக்களும் நாடும் அதன் போக்கில் சென்று கொண்டிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.