Header Ads



சீனாவில் அறிகுறிகளே இல்லாமல் 980 பேருக்கு கொரோனா

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்த நாடு முழுவதும் பரவி, உலகமெங்கும் கால் பதித்துவிட்டது.

சீனாவைப் பொறுத்தமட்டில் அது கட்டுப்படுத்தப்பட்டு, இப்போது இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. உகான் நகரில்கூட மக்கள் முன்போலவே வாழத்தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் அறிகுறிகளே இல்லாமல் அங்கு கொரோனா மீண்டும் பரவத்தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் இல்லாமல் அங்கு 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அதிலும் உகான் நகரிலும், அது அமைந்துள்ள ஹூபெய் மாகாணத்திலும் மட்டுமே 631 பேருக்கு அப்படி கொரோனா பாதித்து உள்ளது.

ஒரே நாளில் 25 பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக சீன சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்தது. இதன்மூலம் அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் தாக்கியோரின் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. 115 பேர் வெளிநாட்டு பயண தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

உகானில் தொடர்ந்து 27 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்போது அறிகுறிகள் இல்லாமல் அங்கு கொரோனா தாக்கி வருவது அரசுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் ஹூபெய் மாகாணத்தில் மட்டுமே கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொழிலாளர் தின கொண்டாட்டங்களுக்காக சீனாவில் நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் அங்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும். போக்குவரத்து சாதனங்கள், ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.