3 சிறுவர்களை CID என அச்சுறுத்தி கையெழுத்து வாங்கியதாக நீதிமன்றில் மனு
பெற்றோரின் பொறுப்பில் இருந்த மூன்று சிறுவர்களை தாம் சி.ஐ.டி.யினர் எனக் கூறி அழைத்துச் சென்று அச்சுறுத்தி ஆவணங்களில் பலாத்காரமாக கையெழுத்து வாங்கியதாக கூறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த மூன்று சிறுவர்களையும் மனுதாரர்களாக கொண்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அவர்களது பெற்றோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மனுவானது சட்டத்தரணி பிரபுத்திகா திசேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில் பிரதிவாதிகளாக, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
காரைத்தீவு அல் சுஹைரியா அரபுக் கலூரியில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதா, அங்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டதா என சி.ஐ.டி. எனக் கூறிக் கொண்ட குழுவினர் தம்மிடம் விசாரணை நடாத்தியதாகவும், தாம் கல்வி கற்ற காலப்பகுதியில் அப்படி ஒன்றும் இடம்பெறவில்லை என பதிலளித்த போது, தம்மை அச்சுறுத்தி பலாத்காரமாக அவர்கள் சில தாள்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் மனுதாரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு 15 ஐ சேர்ந்த சிறுவர்கள் மூவர் சார்பில் தாக்கல்ச் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அரசியலமைப்பின் 11, 12(2), 13(1), 13(2), 14(1), (2) ஆம் சரத்துக்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பிரதிவாதிகளின் செயற்பாடு காரணமாக மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மனுதாரர்களான தாம் 2013 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து சில வருடங்களில் பொருளாதார சிக்கல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் கைவிட்டதாகவும், இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு மட்டக்குளி ஜும் ஆ பள்ளிவாசல் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, எழிய பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சுஹைரியா அரபுக் கல்லூரியில் சேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அங்கு அரபு கற்கைகளுக்கு மேலதிகமாக கணிதம், ஆங்கிலம், கணினி ஆகியவற்றையும் தாம் கற்றதாகவும் எனினும் ஒரு போதும் ஆயுத பயிற்சிகளையோ, அடிப்படைவாதப் போதனைகளோ தமக்கு வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அதனை அண்மித்த நாளொன்றில் தமது வீட்டுக்கு வந்த சி.ஐ.டி. என கூறிக்கொண்ட குழுவினர், சில புகைப்படங்களைக் காட்டி, அவர்கள் தாம் கற்ற அரபுக் கல்லூரிக்கு வந்து அடிப்படை வாதத்தை போதித்து ஆயுத பயிற்சி அளித்ததாக கூற வற்புறுத்தியதாக மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்கடடியுள்ளனர்.
பெற்றோர் உள்ளிட்ட எவரும் இல்லாத இடத்தில் வைத்து அச்சுறுத்தி விசாரிக்கப்பட்டு பலாத்காரமாக கையெழுத்தும் பெறப்பட்டுள்ள சூழலில் குறித்த சிறுவர்கள் உள ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே மனுதாரர்கள் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக சி.ஐ.டி.யினர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையில், காரைத்தீவின் குறித்த அரபுக் கல்லூரி தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தி அங்கு கற்றவர்களை தேடி விசாரித்து வாக்கு மூலம் பெற்று வந்தது. அதன்படி அங்கு ஆயுதப் பயிற்சி மற்றும் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதாக அங்கு கற்ற மாணவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக சி.ஐ.டி. தரப்பில் கூறப்பட்டு வந்த பின்னணியிலேயே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல்ச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment