Header Ads



இலங்கையில் கொரோனா பரவலுக்கு சீனாவே முழுப்பொறுப்பு - தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

சீனாவுக்கு எதிராக இலங்கையிலும் பொதுமக்கள் குழு ஒன்று சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது. தமது நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் இதனை உதாரணமாகக் கொண்டு சீனாவுக்கு எதிராக நடவடிக்கைக்கு இலங்கையில் தயார் நிலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இது தொடர்பில் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

சீனாவுக்கு எதிராக உள்ளூரிலும் சர்வதேசத்திலும் நடவடிக்கை எடுக்கக்கோரியே இந்த சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித விதானகே இது தொடர்பில் கருத்துரைக்கையில்,

இலங்கையிலும் சர்வதேசத்திலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பிரதீபா மஹாநாகமஹேவ உட்பட்டவர்கள் இந்த சட்டஆலோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ரஞ்சித் விதானகே குறிப்பிட்டுள்ளார்.

இந்தவிடயத்தில் சீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அடிப்படைகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கவன ஈனமே கொரோனா வைரஸ் ஏனைய நாடுகளின் பரவுவதற்கு காரணமாக இருந்தது என்று விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாரியளவு உயிரிழப்புக்களும் பாரியளவு சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வைரஸை சீனா தமது நாட்டுக்குள் கட்டுப்படுத்திய போதும் சீனாவில் இருந்து அது ஏனைய நாடுகளில் அது பரவியுள்ளது.

வுஹான் மாகாணத்தில் இருந்து அருகில் உள்ள பீஜிங்கிற்கு கொரோனாவை பரவவிடாமல் செய்த சீனா, ஏனைய உலக நாடுகளுக்கு அது பரவாமலிருக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்தநிலையில் தாம் சீனாவுக்கு செலுத்தவேண்டிய கொடுப்பனவுகளை கொரோனா வைரஸ் பரவலுக்கான நட்டஈடாக அந்த நாட்டிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறுமாக இருந்தால் அமெரிக்கா உட்பட்ட நாடுகளின் உரிமைக் குழுக்களுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 ரில்லியன் டொலர்கள் நட்ட ஈட்டை கோரும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கப்போவதாக தேசிய நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் விதானகே எச்சரித்துள்ளார்.

இதேவேளை தென்னாசிய நாடுகளும் இந்த விடயத்தில் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விதானகே அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.